கற்கள் பொதிந்த ஓடைக்கரையில்
சிறுதேளையோ பூரானையோ
இரையாக்கியபின் கிளையிலமரும்
கொண்டலாத்தி
செங்கதிர்கள் பிடரியில் ஊடுருவ
மகுடம் சூடிய மன்னரைப் போல
இருக்கிறது
கற்கள் பொதிந்த ஓடைக்கரையில்
சிறுதேளையோ பூரானையோ
இரையாக்கியபின் கிளையிலமரும்
கொண்டலாத்தி
செங்கதிர்கள் பிடரியில் ஊடுருவ
மகுடம் சூடிய மன்னரைப் போல
இருக்கிறது
இளஞ்சாம்பல் மந்தியோ
மலையணிலோ முயலோ
மரகதப் புறாவோ
மயில் குஞ்சுகளோ
கானுயிர்கள் எதுவாயினும்
கரும்பருந்தின் நிழல் ஊரும் காட்டில்
கவனம் தேவை
அன்பிற்குரிய நண்பர் செழியன் அவர்கள் "பறவைகளுக்கு ஊரடங்கு" என்ற நூலை எழுதியிருக்கிறார். பறவைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் செழியன். தன்னுடைய அனுபவங்கள் மூலமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பறவை சரணாலயங்களுக்கும் சென்று அங்குள்ள பறவைகளை அவதானித்து தன் அனுபவம் மூலமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். பறவை சரணாலயங்கள் மட்டுமல்லாது, வீட்டை சுற்றியே பறவைகளை அவதானிப்பது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். 24 கட்டுரைகளை இந்த நூலில் எழுதியிருக்கிறார். இதில் குறிப்பாக ஆமூர் வல்லூறு பற்றிய கட்டுரை முக்கியமானதாக கருதுகிறேன். உலகில் அதிக தூரம் வலசை செல்லும் இந்த வல்லூறுகள் வட கிழக்கு இந்தியாவை கடக்கும் போது அதிக அளவில் வேட்டையாடப்படுவதை பதிவு செய்திருக்கிறார்.
இன்று பறவை நோக்குதல் என்பது வளர்ந்து வரும் ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த நிலையில் நண்பர் செழியன் அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
ஒன்று அவருடைய அனுபங்களில் இருந்து அவர் பறவைகளை நிதானமாக கவனித்தார் என்பது புரிகிறது. அவரிடம் அவசரம் இல்லை. ஒரு நத்தை குத்தி நாரை, நத்தையை முழுவதும் விழுங்கும் வரை அவர் அதை பொறுமையோடு அவதானித்திருக்கிறார். அது போல ஒரு மஞ்சள் மூக்கு நாரை ஒரு மீனை முழுவதும் விழுங்கும் வரை அதை பொறுமையோடு அவதானித்திருக்கிறார். அது எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாவது, அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்தியிருக்கிறார். நேரமின்மை காரணமாக இன்று பலரும் சொந்த வாகனங்களையே பயன்படுத்தும் நிலையில் உள்ளோம்.
இந்த இரண்டு காரணங்களுக்கும் அடிப்படை பொறுமை. அதை பறவை ஆர்வலர்களும் நிச்சயம் கையாள வேண்டும். வாசிக்க வேண்டிய புத்தகம்.
இந்த நூலை வாங்க காக்கை கூடு
அல்லி பூத்திருக்க
ஆகாயம் வெளுத்திருக்க
தக்கை மிதப்பது போல
தண்ணீரில் கூடமைத்து
பொரித்த குஞ்சுகளை
பத்திரமாய் பாதுகாத்து
பருந்துகள் பக்கம் வர
பயமின்றி எதிர்த்து நின்று
இரை தேட உடனிருந்து
இலைமேல் நடைபழக்கி
தலைமுறைகள் காத்திடும்
நீள வால் இலைக் கோழி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
பிற்பகலில் கொட்டித்தீர்த்த
கனமழைக்குப் பிறகு
தூவானம் தொடர்கின்ற
மாலை வேளையில்
தேநீரில் சுவையை கூட்டுகிறது
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து
பாடிக்கொண்டிருக்கும்
கருஞ்சிட்டு
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
அலைகள் சற்றே உயரும்பொழுது
பூமி சற்றே குளிரும்பொழுது
இரவின் நீளம் குறையும்பொழுது
நிலவு முழுதாய் ஒளிரும்பொழுது
ஆற்றின் கரையில் நெடிந்துயர்ந்த
நீர் மருதிலிருந்து
மீண்டும் மீண்டும் எழுப்பும் குரலால்
விடியலைக் கொண்டுவருகிறது
அக்கா குயில்
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மலையடிவாரக் கரடுகளில்
மேயுமொரு வெள்ளாடு
பாறைகளின் மீதேறி
பக்குவமாய் கீழிறங்கி
புதர்க் கொடிகளை இழுத்து
பூச்சிகளை விரட்டிவிட
வெட்டுக்கிளி பிடித்துவந்து
வெள்ளாட்டின் மீதமரும்
இரட்டைவால் கரிக்குருவி
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
குளத்தில் ஓய்வெடுக்கும்
புலியின் முதுகில் ஏறி
அமர்ந்திருந்திருக்கும்
சிறிய தவளை பயமறியாது.
புலியென்றும் அறியாது.
தொழிற்சாலைக் கழிவுகள் கலக்காதவரை
கங்கை புனிதமாகத் தான் இருந்தது.
பெருநகரச் சாக்கடைகள் கலக்காதவரை
கங்கை புனிதமாகத் தான் இருந்தது.
மனித இனம் உருவாகாத வரை
கங்கை புனிதமாகத் தான் இருந்தது.
இப்போதும் கங்கையின் புனிதம்
மிச்சமிருக்கிறது.
நன்னீர் ஓங்கில்கள்
மிச்சமிருக்கும் வரை
கங்கையின் புனிதமும்
மிச்சமிருக்கும்.
*ஓங்கில் - Dolphin
நான் எழுதும் கவிதைகளில் சில
எனக்கு விருப்பமானவையாக இருந்தன.
பின்னொரு நாள் நான் எழுதிய எல்லா கவிதைகளும்
எனக்கு விருப்பமானவையாக மாறின.
நான் எழுதும் எல்லாமே கவிதைகள்
என்று எண்ணத் தொடங்கினேன்.
நான் எழுதும் எல்லாவற்றையும் கவிதைகள்
எல்லோருமே நம்பத் தொடங்கிவிட்டனர்.
உங்களில் ஒரு சிலருக்குத் தெரியும்.
இங்கே நான் என்பது நான் அல்ல.
இருந்தால் என்ன.
கவிதைகள் எல்லா நேரங்களிலும் திகட்டுவதில்லை.
முதிர்ந்த அத்திமரமொன்றின் நிழலில்
கீழே விழும் பழுத்த பழங்களை
உண்ணக் காத்திருக்கிறது
காட்டுப்பன்றி.
ஒவ்வொரு கிளையாய் தாவி
அத்திப்பழங்களை தேர்ந்தெடுக்கும்
நீலச்சிட்டு பன்றிக்கும் பசியாற்றுகிறது.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
வரப்பிலோடும் தவளையொன்றை
துரத்திச் செல்லும் ஓலைப்பாம்பை
தடித்த கால்களால் தடுத்து நிறுத்தி
வளைந்த அலகினால் இருகச் சுற்றி
மிச்சமின்றி முழுமையாய் விழுங்கி
அந்தியில் கூடடையும் அன்றில்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
புத்தனைப் போல அமைதியாக
அமர்ந்திருக்கும் பாம்புத்தாரா
சிறகுகளை விரித்தபடி
வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது.
முற்றிலும் நீரில் மூழ்கி
குறிவைத்த மீனைக்கவ்வி
கூரிய அலகால் சுண்டிவிட்டு
உயிரோடு விழுங்கும்
வேட்டைச் சம்பவங்கள்
புத்தனும் அறியாதது.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
எதற்கும் இருக்கட்டும் என
வெட்டாமல் விட்டுவைத்த
காய்ந்துபோன மருதாணிமரத்தில்,
தினைக்குருவி
கூடுகட்டத் தொடங்கியதும்
சிவக்கத் தொடங்கியது
வானம்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
நன்றி - ராமமூர்த்தி அவர்களே..!!
இந்த வரிசையில் இன்றைக்கு நாம் பார்ப்பது பா.சதீஸ் முத்து கோபால் எழுதிய, "யாருக்கானது பூமி" இதன் சிறப்பு என்னவென்றால், தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் 2016 ல் நடந்த சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவில் எஸ். ராமகிருஷ்ணன். ச.தமிழ்செல்வன், பா.திருமாவேலன் ஆகியோர் கொண்ட குழு மூலம் 2014-2015 ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுச் சூழலிற்கான நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது....
அடை மழை ஓய்ந்த
நண்பகல் நேரத்தில்
மேகங்கள் கலைந்த
மிதமான வெப்பத்தில்
வாகனங்கள் செல்லும்
வளைந்த மலைச் சாலைகளில்
இரைதேடும் மணிப்புறா
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
நான்குமுனை சந்திப்பில்
நூற்றாண்டை கடந்தமரம்
புள்ளினங்கள் தலைமுறைக்கும்
வாழ்வளித்த ஆலமரம்.
சாலைகளை விரிவாக்க
மேம்பாலம் அமைத்தபின்னர்
பாலத்தின் சிறுதுளையில்
கூடமைக்கும் நாகணவாய்
பசியார பழங்களின்றி
குப்பைகளில் இரைதேடும்.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
தைப்பனியின் காலைப் பொழுதில்
காய்ந்த நாணல் ஒன்றில்
வந்தமரும் புதர் சிட்டு
பாடத் தொடங்குகிறது.
காற்று இசைக்கத் தொடங்கியதும்
நாணலும் ஆடத் தொடங்கியது.
புதுக்கவிதைகள் எழுதுமொருவன்
வருடாவருடம் வலசை வரும்
செங்கால் நாரைகளுக்காக
காத்திருக்கிறான்.
மிகவும் அருகிப்போன இப்பறவைகளை
காணக்கிடைக்காது தேடிக்களைத்த பொழுது
புறநானூற்றுப் புலவரின் மேல்
கொஞ்சம் பொறாமை
வரத்தான் செய்கிறது.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :