பல்லுயிர்களுக்கானது பூமி - முதல் விமர்சனம்

எழுதுகிறவனுக்கு மகிழ்ச்சியே, பிறர் அதை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் போது தான். அதுவும் இப்படி ஆழ்ந்து வாசித்து, ஒருவர் மதிப்பரை எழுதினால் இறகுகள் முளைக்கத்தானே செய்யும். எழுதியது ஒரு எழுத்தாளர் என்றால் சிறகுகள் படபடக்கும் தானே. 

மிக்க நன்றி சிவக்குமார் சார். Sivakumar Ganesan 

நான் பறந்து கொண்டிருக்கிறேன். 

******************************************

பல்லுயிர்களுக்கானது பூமி 

கட்டுரைகள் 

பா.சதீஸ் முத்து கோபால் 

காக்கைக்கூடு பதிப்பக வெளியீடு 

பக்கங்கள் 124 

விலை ரூபாய் 140


பழனி மலைத் தொடரும் பறவைகளும், பறவைகளோடு வாழ்ந்திருத்தல், யானைகள் வாழும் பூமி, காட்டுயிர்களின் மறு அறிமுகம் இப்படி 15 தலைப்புகளிலான சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பு.

சுற்றுச் சூழல் ஆர்வலரும்,செயற்பாட்டாளருமான பா.சதீஸ் முத்து கோபால் அவர்களின்

யாருக்கானது பூமி? கட்டுரை தொகுப்புக்குப் பின்னான இரண்டாவது தொகுப்பு இது.

ஒவ்வொரு தேசத்திலும் அழிந்துபோன பறவை இனங்களை, விலங்குகளைக் குறித்த கட்டுரை, ஆழ்ந்த வருத்தத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக, கியூபாவின் cuban macaw என்கிற பறவை அருகிலிருந்த பறவையை, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போதும் பறந்து செல்லாமல் வீழ்ந்த பறவையை உற்று நோக்கி அமர்ந்திருக்கும் குணம் தான் இந்த பறவையை எளிதாக பிடிக்கவும், கொல்லவும் முடிந்திருக்கிறது என்கிற வரிகளின் துயரத்தைப் பாருங்கள்.

கேரளாவில் உள்ள தட்டக்காடு பகுதியில், இரவாடி விலங்கான தேவாங்கின் மேல் ஏராளமான ஒளியைப் பாய்ச்சி படம் எடுப்பதில் எந்த அறமும் இல்லை என்று வழிகாட்டியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது புகைப்படக் கருவியும் மூடி வைத்த சதீஸ் பாராட்டுக்குரியவர். படம் எடுக்கையில், பறவைகளும், குஞ்சுகளும் பாதிக்கப்படக் கூடும் என்பதால், பறவைக் கூடுகளைப் படம் எடுக்க மாட்டேன் என்கிற அவரது உறுதியும் பாராட்டத்தக்கது.

பழனி கொடைக்கானல் இடையே செயல்படுத்தப்படப் போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் கேபிள் கார் திட்டத்தின் கருப்புப் பக்கங்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் கொல்லப்படும் கானுயிர்கள், அவர்கள் கொட்டிச் செல்லும் குப்பைகள், காட்டுத்தீயில் கருகும் சோலை காடுகள், இவற்றைப் பற்றி விரிவாக பேசுகிற பழனி மலை தொடர்ச்சியின் சிக்கல்கள் என்ற கட்டுரையை, இந்த தொகுப்பின் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

அழிந்து வரும் இனமாக கான மயில்கள் குறித்த கட்டுரையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அழிந்து போன கானுயிர்களை மறு அறிமுகம் செய்வதில் உள்ள பிரச்சனைகளையும், நன்மைகளையும் விரிவாகப் பேசுகிறது காட்டுயிர்களின் மறு அறிமுகம் கட்டுரை.

சிங்கப்பூரின் இயற்கை வளம் கட்டுரையை வாசிக்கையில், நமது நாட்டின் நிலையை நினைத்து ஒரு வெப்பப் பெருமூச்சு வழிகிறது.

கடும் குளிரில், காடுகளில் அட்டைப்பூச்சிகளுக்கு நடுவே காட்டு மாடுகளின் வாழ்விடங்களில் பெரும் சிரமங்களுக்கு இடையே கொடைக்கானல் நகரைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுகிற சோலை குருவி என்கிற அமைப்பின் இளைஞர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

இந்தியாவில் 101 யானை வழித்தடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 71 வழித்தடங்களின் அகலம் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக உள்ளதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகள். எவ்வளவு பெரிய கொடுமையிது. பிறகு யானைகள் அட்டகாசம்(?) செய்யாமல் என்ன செய்யும்?

யானைகளை இழப்பது இயற்கை இழப்பது போல் இல்லையா? என்கிற கேள்வியை வெகு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இந்தியாவின் தேசிய பறவையாக முதலில் கானமயில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பழனி அருகில் உள்ள குதிரையாறு அணையில் நீர் நாய்கள் இருந்தன. வேடந்தாங்கலில் கூடு கட்டும் பறவைகள் வெளிநாட்டுப் பறவைகள் அல்ல. இப்படி ஏராளமான ஆச்சரியமான தகவல்கள் நிறைந்துள்ளன.

கானுயிர்கள் குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும் வெறுமனே எழுதுபவராக,பேசுபவராக இல்லாமல் தீவிரமாக செயல்படுபவராகவும் இருப்பவர் என்பதை அறிந்திருக்கிறோம்.

அதைத்தான் அணிந்துரை தந்திருக்கிற ஆளுமைகளான தியோடர் பாஸ்கரன் அவர்களும், கோவை.சதாசிவம் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

பொருத்தமான புகைப்படங்களைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

அட்டைப் படத்திற்கும் வாழ்த்துகள்.

ஒலி மாசு, நதிநீர் இணைப்பின் குறைபாடுகள், காட்டுயிர்களின் சிக்கல்கள் இன்னும் பல தலைப்புகளில் உள்ள கட்டுரைகளும் கவனத்துக்குரியவை.

மனிதர்களின்அறியாமையால்,சுயநலத்தால், அலட்சியத்தால் கானுயிர்கள், சுற்றுச்சூழல் அழிந்து வருவது குறித்த காரணங்களையும், கவலைகளையும், தீர்வுகளையும் பேசுகிற புத்தகம்.


Post a Comment

0 Comments