Feb 26, 2023

காட்டுயிர்களுக்கு ஏன் உணவு தரக்கூடாது ?

மலை அணில் 

நீங்கள் ஒரு மலைப்பாதையில் பயணம் செய்கிறீர்கள். அப்போது வழியில் நிறைய குரங்குகள் அமர்ந்திருக்கின்றன. உங்களிடம் தேவைக்கு அதிகமாகவே உணவும், நொறுக்குத் தீனியும் இருந்தால் என்ன செய்வீர்கள். பசியோடு காத்திருக்கும் குரங்குகளுக்கு உங்கள் உணவைக் கொடுத்து மகிழ்வீர்களா? அப்படியானால் நீங்கள் தான் அந்தக் குரங்குகளுக்கு முதல் எதிரி எனப் புரிந்து கொள்ளுங்கள்.

மனிதர்களிடம் உணவைப் பெறுவதனால் மூன்று முக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 


காட்டுயிர்களுக்கு நோய் ஏற்படுகிறது :

மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் இயற்கையிலிருந்து பெற முடியாதவை. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையிலிருந்து உணவைப் பெற்ற இவற்றின் செரிமான உறுப்புகளால் இந்த உணவை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் விளைவாக நோய்தாக்குதலுக்கு அவை உள்ளாகின்றன. நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பும், அவற்றின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. உணவைத் தேடி அலையும் ஆற்றலையும், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அறிவையும் அவை இழக்க நேர்கின்றன. இவ்வாறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சில காட்டுயிர்கள் மற்ற உயிரினங்களுக்கும் நோய்களை கடத்துகின்றன.

காட்டுயிர்கள் வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன :

மனிதர்கள் கொடுக்கும் உணவுகளால் கவரப்படும் இந்த காட்டுயிர்கள், பல நேரங்களில் சாலைகளில் காத்திருக்கிறன்றன. குறிப்பாக மலைச் சாலைகளில் இந்த காட்டுயிர்கள் விபத்தில் சிக்கி மாண்டு போகின்றன. பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரத்தில் போக்குவரத்து குறைந்த பிறகு மான்களும் சாலை ஓர உணவுகளை நாடி வந்து விபத்தில் சாகின்றன. சில சமயங்களில் இந்த மான்களையும், குரங்குகளையும் பின் தொடரும் சிறுத்தைகளும் இறக்க நேரிடுகிறது. 

பெருங்கணத்தான் எனும் சாம்பல் அணில் 

சிறுத்தை 

உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது :

காட்டுயிர்கள் தானாக காடுகளில் இரை தேடும் வரை எந்த சிக்கலும் இல்லை. அவை அவ்வாறு உணவு தேடுவதன் மூலம் காட்டை வளம் பெறச் செய்கின்றன. பறவைகளும் தாவர உண்ணிகளும், காய்களையும் பழங்களையும்  உண்டு எச்சத்தின் மூலமாக விதைப்பரவல் செய்யவேண்டியவை. அந்த விதைகளுக்கு கூடுதல் முளைப்புத் திறனும் உண்டு. காடு முழுக்க அலைந்து திரியும் இந்த உயிரினங்களால்  காட்டின் பல்வேறு இடங்களும் வளம் பெருகி, இயற்கை சமநிலையுடன் பாதுகாக்கப்படும். குரங்குகள் மரங்களின் உச்சியின் அமர்ந்து காய்களை உண்ணும் போது, தவறி விழும் காய்களை மான்கள் உண்கின்றன. இருவாச்சியின் எச்சத்தில் உருவாகும் அத்தி மரம் அணில்களுக்கு வாழிடம் ஆகிறது. யானையின் சாணத்தில் உப்பை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை மூலம் மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் பூக்களை கனியாக்குகிறது. இன்னும் நாம் அறியாத, ஆயிரம் ஆயிரம் இயற்கை சுழற்சியினை, பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டையும், சோளக்கருதையும் வாங்கி உணவாகக் கொடுத்து ஜீவகாருண்யம் என்ற பெயரால் காட்டை நாசம் செய்வது எப்படி சரியாக இருக்கும் ?





கரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருந்த சமயத்தில் யாரோ ஒருவர், ஒரு வண்டி நிறைய வாழைப்பழங்களை வாங்கி, காடுகளில் உள்ள குரங்குகளுக்கு கொடுத்தது, சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியானது. அவரை எல்லா ஊடகங்களும் பாராட்டின. காட்டுயிர் பேணலையும், ஜீவகாருண்யத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என நினைக்கிறன். காட்டுயிர்களுக்கு தயவு செய்து உணவைக் கொடுக்காதீர்கள். அதுவே காடுகளுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


இந்தப் படங்கள் அனைத்தும் பழனி மலைத் தொடரில் எடுக்கப்பட்டது.

Feb 25, 2023

காட்டுக்கோழி [Gray Jungle-fowl]

கடமானா காட்டுமாடா

எனப் புரியாமல் 

உறைந்து நிற்கும் 

ஒரு கணத்தில்,

உதிர்ந்திருக்கும் சருகுகளைக் 

களைத்தபடி 

புழுக்களைக் கொத்தித்தின்னும் 

காட்டுக்கோழி,

சட்டென உற்றுநோக்கி

சொல்லாமல் சொல்கிறது 

காடென்றால் அப்படிதான்.


Feb 24, 2023

சோலைப்புறா [Nilgiri Wood Pigeon]

அயல் மரக்கிளைகளின் ஊடாக,

மேகம் கரைந்து செல்லும்

உச்சிமலைக் காட்டிலும்,

உணவு தேடவும் ஓய்வெடுக்கவும்

இயல் மரக்கிளைகளையே

தேர்வு செய்கிறது,

சோலைப்புறா.


Feb 23, 2023

கானாங்கோழி [White Breasted Waterhen]

ஓடையோர சாலையை

வேகமாகக் கடந்த பின்னர்

புதருக்குள் ஒளிந்துகொள்ளும்

கானாங்கோழி,

எப்படியும் வெளியே வருமென

காத்திருக்கும் நீங்கள்,

எப்போது புரிந்து கொள்வீர்கள்.

அந்தப் புதரில் எதுவும் இல்லை.


Feb 22, 2023

ராஜாளி [Bonelli's Eagle]

வேட்டைக்காக காத்திருக்கும் 

வேங்கைப்புலி போல 

நிதானமாக சுற்றிவரும் 

ராஜாளியை அறியாமல் 

வங்கிலிருந்து வெளியேவருகிறது 

காட்டு முயல்.

சிறகுகளை மடக்கி 

அம்பென சீறிவரும் ராஜாளி,

தன் கூரிய நகங்களால் 

சதைகளை இறுகப்பற்றி 

தூக்கிச் செல்கிறது 

ஒரு குள்ள நரியை.

Photograph by Raj 🦅


Feb 21, 2023

உயிர்ப்புதையல் : திரு.கோவை சதாசிவம்

அரிதிலும் அரிதான ஒன்றை புதையல் என்போம். அப்படி அரிதான, மனிதர்களால் உருவாக்க முடியாத இயற்கை வளத்தை உயிர்ப்புதையல் என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும். ஒரு வகையில் இந்த நூலுமே புதையலுக்கு நிகரான மதிப்புடையது தான். திரு.சதாசிவம் அவர்களால் மிகுந்த அர்ப்பணிப்புடன் எழுதப்பட்ட இந்த நூல் சூழலில் நிகழும் பல்வேறு ஆபத்துகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 


வேங்கைப்புலி, பாறு கழுகுகள், இருவாச்சி, வரையாடு, யானைகள், பழந்தின்னி வௌவால், சோலை மந்தி போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த காட்டுயிர்கள் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்க்கின்றன. அருகி வரும் இந்த உயிரினங்களின் வாழிடச் சூழல், அவற்றின் முக்கியத்துவம், தற்போது அந்த உயிரினங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக பேசியிருக்கிறார் ஆசிரியர். 

இதில் குறிப்பாக பாறு கழுகுகள் (பிணந்தின்னி கழுகுகள் ) பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். வீட்டுக்குள் ஒரு சுண்டெலி செத்துவிட்டால் அதன் வாடை நம்மால் தாங்கமுடியாது. அதை அப்புறப்படுத்தவே முயல்வோம். அப்படியானால் காட்டில் ஒரு யானை இறந்துவிட்டால் அந்தப் பணியை யார் செய்வார் என்ற கேள்வி மூலமே விளக்கம் அளிக்கிறார். டைக்லோபினாக் (Diclofenac) மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளை, அவை இறந்த பிறகு உண்ணும் இந்த கழுகுகள் சிறுநீரக பாதிப்பால் உடனடி மரணத்தை எட்டுவதால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். எனவே காடுகளுக்குள் மற்ற உயிரினங்கள் நோய்வாய்ப்படும் என்பதை விளக்கும் போது  உணவுச் சங்கிலியின் அவசியம் புரிகிறது.

கடல் சந்திக்கும் பிரச்சனைகள், சுரப்புன்னைக் காடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், சோலைக்காடுகளின் முக்கியத்துவம் என பல தளங்களிலும் விரிவாக பேசுகிறது இந்த நூல். ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை போன்ற இயற்கையின் மீது நடத்தப்படுகிற தாக்குதல்களையும், நொய்யல் நதி மாண்டு போன வரலாறையும் பேசும் போது மனம் கனத்துப்போகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியல் தலைவர்களும், அவசியம் வாசிக்க வேண்டிய நூல். சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசரத்தை இந்த நூலை படிக்கும் போது உணர முடிகிறது. மரபணு மாற்று பயிர்களால் நிகழப் போகும் ஆபத்துகளையும், பருவநிலை பிறழ்வால் நிகழப் போகும் ஆபத்துகளையும் எப்படி எளிதில் கடந்துவிட முடியும் ?

காக்கைக்கூடு தளத்தில் இந்த நூலைப் பெற முடியும் : https://crownest.in/product/uyir-puthayal-kovai-sathasivam-books/


Feb 18, 2023

Birds of Singapore - Page 8

 














பூங்குயில் [Blue faced Malkoha]

கரும்பாறைக் குன்றுகளில் 

கருவேல மரக்காடுகளில் 

கூடொட்டிப் பிழைக்காத 

குயிலினங்களில் ஒன்றான 

பூங்குயில்கள் வாழ்ந்திருக்கும்.

அவை அடர் புதரில் இருந்தாலும்

அதனிருப்பை நமக்குணர்த்தும் 

அதன் நீண்ட வாலும் 

நீல வளைய விழிகளும் 


Thanks, Raj for the photograph 


Feb 9, 2023

தீக்காக்கை [Malabar Trogan]

புகையும் சிகரட் துண்டிலிருந்து

பற்றி எரியும் மலைக்காட்டில் 

புற்கள், சிறு செடிகள் 

பெரு மரங்கள்

என யாவும் கருகியபின்,

நெருப்பின் நிறங்கொண்ட பறவை

தேடி அலைவது

தன் கூட்டை மட்டுமல்ல.

Thanks to Nooparan for the photograph

Feb 4, 2023

தமிழ் ஒரு சூழலியல் மொழி : திரு.நக்கீரன்

தமிழின் பெருமைகளைக் கூற ஆயிரம் நூல்கள் உண்டு. அதுபோல இயற்கையை பற்றியும் சூழலியல் பற்றியும் பேச பல மொழிகளிலும் நூல்கள் உண்டு. இந்த இரண்டு துறைகளையும் ஒரே புள்ளியில் இணைத்துப்பார்ப்பது எளிது. ஏனென்றால் இயற்கையில் அது இணைந்தே இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையாக்கித் தருவது சுலபமல்ல. அந்த சவாலான பணியைத் தான் இந்த நூலில் செய்து காட்டியிருக்கிறார் ஆசிரியர் திரு.நக்கீரன் அவர்கள். "தமிழ் ஒரு சூழலியல் மொழி" என்ற நான்கு வார்த்தைகளுக்குள் இருக்கும் ஆழமான பொருளை எளிமையாக உணர்ந்து கொள்ள உதவுகிறது இந்த நூல். 


"ஒரு மொழியின் இயற்கை பாதிக்கப்படாமல் இருக்கும் வரையே அது சூழலியல் மொழி" என்ற பார்வையில் இந்த நூலை தொடங்கும் போதே, தமிழ் மொழி சூழலியலை தன்னுள்ளே வளர்த்துக்கொண்டது என்பதையும், இன்று நாம் எப்படி அந்த மொழியின் வளத்தை இழந்திருக்கிறோம் என்பதையும் பேசத் தொடங்கிவிடுகிறது. 

ஆசிரியருக்கு தமிழ் மொழியின் மீது பற்று இருந்தாலும், அறிவியலை, சூழலியலை, பரிணாம வளர்ச்சியை எங்கேயும் மறுக்கவில்லை. "தமிழ் உலகின் முதல் மொழி" எனப் பேசி கைதட்டு வாங்குபவர்களுக்கு மத்தியில், அது உண்மையில்லை என்பதை தயக்கமின்றி கூறுகிறார். அந்த உண்மையும் நேர்மையும் தானே அறம். அது தானே ஒரு மொழிக்கு வளம் சேர்க்கும். தொல்காப்பியத்தின் துணையோடு, இயற்கையையும் செயற்கையையும் பிரித்துக் காட்டுவதோடு, தமிழ் ஏன் இயற்கையோடு இணைந்த மொழி என்பதையும் விளக்கிக் கூறுகிறார்.

தமிழ் மொழி ஒரு சூழலியல் மொழி என்பதை விளக்கிக்கூறும் அதே நேரத்தில், தமிழ் மன்னர்கள் எல்லோரும் இயற்கையை காப்பற்றியவர்கள் இல்லை என்பதைக் கூறவும் தயங்கவில்லை. சங்க இலக்கியங்களில், ஒரு சூழ்நிலையை விளக்கும் பாடலில், கூடுதலாக பல தகவல்கள் இடம் பெற்றிருப்பதை நாம் அறிவோம். குறிப்பாக மரம், பூக்கள், பருவ காலம், பறவைகள் என பல்வேறு தகவல்கள் குவிந்திருக்கும். இவ்வளவு விளக்கம் ஒரு பாடலுக்கு அவசியமா எனக் கேட்பவர்களுக்காகவே, "நாராய்  நாராய்" பாடலை உதாரணமாகக் காட்டி, செங்கால் நாரைகள் வலசைப் பறவை என்பதையும், அந்த பாடலில் குறிப்பிடப்பட்டது "White Stork" எனப்படும் செங்கால் நாரைகள் தான் என்பதையும் விளக்குகிறார்.

தமிழ் ஏன் மண்ணின் மொழி என்பதோடு, தமிழ் எந்த மொழிக்கும் எதிரியில்லை என்பதையும் கூறுகிற ஆசிரியர், தமிழ் மொழி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதெல்லாம் தமிழ் காப்பற்றப்பட்டது அது ஒரு சூழலியல் மொழி என்பதாலேயே என்பதை விளக்கும் இடத்தில், நாம் பேசிக்கொண்டிருக்கும் மொழியின் மீதான ஈர்ப்பு கூடுவதில் ஆச்சர்யமேதுமில்லை. கலைச்சொற்கள் எவ்வாறு பிறக்கிறது என்பதையும், அதில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆராய்கிறார் ஆசிரியர். 

ஒரு கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த நூலை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் அதில் உணர முடியும். 

"ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களை வைத்திருக்கும் ஒரு மொழியை, அந்த உயிரினத்தையே அறியாத ஒரு வேற்று மொழிச் சொல் அடித்து வீழ்த்தும் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்வோம். ஓர் இரைகொல்லி விலங்கு தன் இரை விலங்கை அடித்து வீழ்த்தும் காட்சிக்கு ஒப்பானது அது. தமிழ் அவ்வாறு இரையாகத் தரப்பட வேண்டிய ஒரு மொழியில்லை."