Mar 14, 2016

மார்ச் 20 : சிட்டுக்குருவிகள் தினம். என்ன செய்யலாம்?


நான் எப்போது பள்ளிகளில் பேசச் சென்றாலும் மாணவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்பேன். கடைசியாக நீங்கள் எப்போது சிட்டுக் குருவிகளை பார்த்தீர்கள் எனக் கேட்பேன். ஒரு சிலர் நினைவில் இருக்கும் பதிலை சொல்வார்கள். ஒரு சிலருக்கு எப்போது பார்த்தோம் என்பதே மறந்து போயிருக்கும். அதே போல உங்களுக்கு தெரிந்த பறவைகளின் பெயரைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் பெரும்பாலான மாணவர்கள் சிட்டுக் குருவியை குறிப்பிடுவார்கள். மனிதர்களுக்கு மிக நெருக்கமான பறவைகளில் ஒன்று சிட்டுக் குருவிகள். ஆனால் இந்த சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது பற்றிய செய்திகளைத்தான் நாம் சமீபத்தில் படிக்கிறோம். அவை ஏன் அழிந்து வருகின்றன எனத் தெரியுமா? அவற்றை எப்படி காப்பாற்றுவது? அதனால் என்ன பயன் எனத் தெரியுமா?




சிட்டுக்குருவிகள் அழிய முக்கிய காரணம் அது வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. முன்பெல்லாம் கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் நிறைய இருந்தன. சிட்டுக் குருவிகள் அங்கேயே கூட்டை அமைத்து முட்டையிட்டு வாழ்ந்தன. ஆனால் இன்று அவற்றால் கூடு அமைக்க முடியவில்லை. வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் சிட்டுக் குருவிகளை அதிகமாக பாதித்தன. எனவே சிட்டுக் குருவிகள் அழியத்தொடங்கின.





ஆனால் இப்போதும் நம்மால் சிட்டுக் குருவிகளை மிக சுலபமாக காப்பாற்ற முடியும். படத்தில் உள்ளது போல சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் அமைத்து தரலாம். சிறிய மண் சட்டியோ அல்லது அட்டை பெட்டியோ கூட போதுமானது. ஆனால் மழையில் நனைந்துவிடாதபடி இருக்க வேண்டும். மேலும் அணில்களால் நெருங்க முடியாதபடி அமைத்து விட்டால் போதுமானது. மேலும், நாட்டுக் கம்பு மாதிரியான சிறிய தானியங்களை உணவாக வைக்கலாம். சில நேரங்களில் அவை அந்த கூட்டை தெரிந்து கொண்டு அங்கே தங்குவதற்கு ஆறு மாதங்கள் கூட ஆகலாம். முதலில் அவை நீங்கள் வைக்கும் தானியங்களை தேடி வரும். பின்பு தினசரி வந்து பழகும். பிறகு உங்கள் வீட்டின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். முட்டையிடும் காலத்தில் நீங்கள் வைத்த சட்டியிலோ அல்லது அட்டை பெட்டியிலோ முட்டை வைக்கலாமா என வந்து சோதித்து பார்க்கும். பிறகு தங்கத் தொடங்கும். ஒரு முறை தங்கி பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் வரும். மற்ற குருவிகளும் இதை பார்த்து அங்கேயே கூடு அமைக்கும்.






சிட்டுக்குருவிகளின் முக்கியமான உணவே புழுக்களும் பூச்சிகளும் தான். இந்த புழுக்களும் பூச்சிகளும் அவற்றுக்கு எப்படி கிடைக்கும்? செடிகளில், மரங்களில், மாடு குதிரை போன்ற விலங்குகளின் சாணத்தில் இருந்து தான் கிடைக்கும். குதிரை வண்டிகள் மறைந்து ஆட்டோக்கள் வந்த பிறகு குதிரைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. நம்முடைய பாரம்பரிய நாட்டு மாடுகள் மறையத் தொடங்கிவ்ட்டன. மேலும் நம் வீடுகளில் வளர்க்கும் செடிகள் யாவும் அழகுக்கான குரோட்டன்ஸ் செடிகளாக மாறிவிட்டன. இந்த செடிகளில் புழுக்கள் வருவதேயில்லை. கிட்டதட்ட அவை பிளாஸ்டிக் செடிகள் போலத் தான் இருக்கின்றன. இப்படியான சூழலில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்.





நம்முடைய நாட்டுச் செடி கொடிகளை வீடுகளை சுற்றி நடலாம். மல்லிகை கொடியில் பூக்கும் பூக்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பயன்படும். அதில் உள்ள பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்டு வாழும். மேலும் இந்த கொடிகளில் சின்னான் குருவிகள் கூடு கட்டி வாழும். அவரை, புடலை போன்ற கொடிகளில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெறலாம். அதில் உள்ள பூச்சிகள் குருவிகளுக்கு உணவாகும். இது மாதிரியான நாட்டுச் செடிகள் நமக்கும் பறவைகளுக்கும் சேர்ந்து பயன்படும். பூச்சிகளை குருவிகள் தின்பதால் நாம் பூச்சிக் கொல்லி ரசாயனங்கள் தெளிக்க வேண்டியதில்லை. எனவே சுத்தமான சுகாதரமான காய்களை நம் வீட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். சிட்டுக்குருவியால் நமக்கு எவ்வளவு பயன்கள் பாருங்கள்.



இது போலவே ஒவ்வொரு பறவையும் நமக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து உதவி செய்கின்றன. ஆனால் நாம் அவற்றுக்கு உதவியாக இருக்கிறோமா? உதவி செய்யவில்லை என்றாலும் பரவயில்லை. தொல்லை செய்யாமலாவது இருக்கிறோமா? மரங்கள் வெட்டப்படுவதும் நீர் நிலைகள் மாசுபடுவதும் பறவைகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன. இப்போதும் சில சிறுவர்கள் உண்டி வில் மூலமாக பறவைகளை குறி வைத்து அடித்துக் கொல்வதை பார்க்க முடிகிறது. இது தவறு அல்லவா? தீபாவளியின் போது பட்டாசு வெடித்து ஆனந்தப்படுகிறோம். பறவைகளால் பட்டாசு சத்தத்தை தாங்கிக் கொள்ள முடியுமா? நம்முடைய பல செயல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பறவைகளை பாதிக்கின்றன. இவற்றிலிருந்து பறவைகளை எப்படி காப்பாற்றப்போகிறோம்?




6 comments:

  1. ஒரே மாதிரியான எண்ணங்களும், அலசல்களும் பயணப்படுவதும் ஒரே பாதை என்பதால் இருக்கும் என்று நினைக்கிறேன்
    .

    ReplyDelete
  2. மிக அருமையாக சொன்னீர்கள்.

    https://mathysblog.blogspot.com/2020/08/blog-post_19.html

    https://mathysblog.blogspot.com/2020/03/blog-post_20.html

    https://mathysblog.blogspot.com/2012/03/blog-post_20.html

    இன்னும் நிறைய பதிவுகள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்
    உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் பதிவு போடுவேன்.



    ReplyDelete