Mar 12, 2016

யாருடைய எலிகள் நாம்? - சமஸ்


நாம் வாசிக்கும் எல்லா புத்தகங்களும் நம் மனசாட்சியை கேள்வி கேட்பதில்லை. ஆனால் மிகவும் அபூர்வமாக இந்த புத்தகம் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே தவறு செய்வதாக சித்தரிக்கப்படும் நம்முடைய சூழலில் இருந்துகொண்டு, இந்த புத்தகத்தை எழுதியதற்காகவே சமஸை வாழ்த்தலாம். இந்தியாவின், தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரச்சனைகளையும் கையில் எடுத்து விரிவாகவும் தெளிவாகவும் விவாதித்திருக்கிறார் சமஸ். பல கட்டுரைகளிலும் பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்த விதம் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றிலிருந்து செய்திகளை எடுத்து நிகழ்காலத்தின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, எதிர்காலத்தின் தேவைக்கான தீர்வை முன்வைக்கிறது இந்த புத்தகம். காந்தியந்தின் உயிர்ப்பை, அறம் சார்ந்த அரசியலின் அவசியத்தை உங்கள் எழுத்துக்களில் உணர முடிகிறது சமஸ்.



தவறு செய்வதை பெருமையாகவும், அதிலிருந்து தப்புவதை கௌரவமாகவும் நினைக்கும் அரசியவாதிகள் ஒரு பக்கம், அதை கொண்டாடும் தொண்டர்கள் ஒரு பக்கம், இது எதையும் கண்டும் காணதது போல இருக்கப் பழகி விட்ட மக்களையும் ஒரு தேசம் ஒருங்கே பெற்றிருப்பது எதிர்காலதிற்கு நல்லதல்ல. இந்த புத்தகம் மக்களுக்கான விழிப்புணர்வு. இதை வாசித்து அரசியல்வாதிகள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் மக்களுடைய மாற்று சிந்தனைக்கு இந்த புத்தகம் வித்தாக அமையும் என்றே தோன்றுகிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை, சுற்றுச் சூழல், வேலைவாய்ப்பு, உலகமயமாக்கல், வெளிநாட்டு உறவு, எல்லைப் பிரச்சனைகள், சர்வதேச சூழல், ஈழம், சாதி மதம் சார்ந்த பிரச்சனைகள், காடுகள் அழிக்கப்படுவது, வன விலங்குகள் வேட்டை, ஊடக அறம் என பல தளங்களிலும் புள்ளி விவரங்களோடு பேசும் இந்த நூல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். 

இந்தியாவின் எல்லா முக்கியமான பிரச்சனைகளையும் விரிவாக விவாதிக்கும் சமஸ், தன்னுடைய கவலைகளை நேரடியாக வெளிப்படுத்தாமல் வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார். பிரச்சனைகளையும் அதற்கு காரணமானவர்களையும் முன்வைத்து வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது வரவேற்புக்குரியது. இந்த தேசம் குறித்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எண்ணற்ற ஆசைகளும் கனவுகளும் உண்டு. இருப்பினும் ஒவ்வொரு தனி மனிதனும் அவனால் இயன்ற தவறுகளை செய்து விட்டு விரல் நீட்டிக் கொண்டே இருக்கிறான். இது ஆள்பவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை எல்லோரிடமும் இருக்கிறது. அறம் சார்ந்த வாழ்வின் நிலைப்பாடுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. ஆனாலும் மனசாட்சி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. சட்டமன்றம் கேட்காத கேள்விகளை, நாடாளுமன்றம் கேட்காத கேள்விகளை, நீதி மன்றம் கேட்காத கேள்விகளை, நம் மனசாட்சியாவது கேட்கட்டும். அதற்கு இந்த நூல் ஒரு திறவுகோலாக இருக்கட்டும்.  


2 comments:

  1. நன்று. வாய்ப்பு அமையும் பொழுது, இந்த புத்தகத்தை வாங்கி படிக்க முயல்கிறேன்.

    ReplyDelete

Follow