Jan 28, 2011

De Grand Voyage





"De Grand Voyage" நவீன கால இளைஞன் ஒருவனும் அவனுடைய தந்தையும் பிரான்சிலிருந்து மெக்காவிற்கு பயணம் போகிறார்கள். குடித்துவிட்டு காதலியை பற்றிய நினைவுகளோடு மகனும், நேரம் தவறாமல் தொழுகை நடத்திக்கொண்டு இறைவனை பற்றிய நினைவுகளோடு செல்லும் அப்பாவும் சேர்ந்து மேற்கொள்ளும் பயணமே கதை. தலைமுறை இடைவெளியை அற்புதமாக திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள்.

Jan 27, 2011

பழனி மலை தொடர்ச்சி

தமிழ்நாட்டிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது பழனி மலைத் தொடர்ச்சி. நிறைய மலைக் கிராமங்களையும் கொடைக்கானல் நகரையும் உள்ளடக்கியது இந்த மலைத் தொடர்ச்சி. இதில் சுமார் 700 சதுர கி.மீ வனப்பரப்பு உள்ளது. இது தவிர காப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் உள்ளது. இந்த பழனி மலைத் தொடர்ச்சியில் உள்ள வனப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனமாகவோ அல்லது வனக் காப்பகமாகவோ தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.

ஏராளமான உயிரினங்கள் இந்த மலைப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக மலை அணில்(Grizzled squirrel), வரையாடு (Nilgiri Thar), கேளையாடு (Muntjac), யானை,புள்ளிமான் (Chital), சிறுத்தைப் (Leopard), கரடி மற்றும் ஒரு சில இடங்களில் அரிதாக புலியும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பறவைகளிலும் பல விதமான பறவைகள் இந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. குறிப்பாக இருவாச்சி(Hornbill) என்ற அரிதான பறவைகள் இங்கு உள்ளன.






இந்த மலைத் தொடர்ச்சியின் பல்வேறு இடங்களில் செழுமையான நீர் நிலைகளும் உள்ளன. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய அருவியும் தமிழ்நாட்டின் அதிக உயரமான அருவியுமான தாலையார் அருவி இங்கு உள்ளது. அதிகமாகும் போக்குவரத்தாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்து போடும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் இந்த மலைப் பகுதி சீர்கேடடைந்து வருகிறது. கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்த்தால் பெருமளவு மாசுபடுவதைத் தவிர்க்க முடியும்.


Palani Hills Conservation Council என்ற அமைப்பு பழனி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றி சொல்லித் தருவதோடு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இந்த மலைப் பகுதியில் மிச்சமிருக்கும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமெனில் நிறைய முயற்சிகளை செய்தாக வேண்டும். இணையத்தளம்: www.palnihills.org/


Jan 25, 2011

அழிந்து வரும் சோலை மந்தி





மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் அரிய விலங்கு சோலைமந்தி (ஆங்கிலத்தில் Lion Tailed Macaque ). IUCN கணக்கெடுப்பின்படி இந்த வகை குரங்கு 2500 க்கும் குறைவாக உள்ளன. உலகின் வேறு எங்கும் பார்க்கமுடியாத இந்த விலங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் காணப்படுகின்றன.


பெரும்பாலும் பழங்கள், பூக்களின் மொட்டுகள், கொட்டைகள் மற்றும் ஒரு சில பூச்சி வகைகளை உண்டு வாழும் இந்த வகை குரங்கு பத்து கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். சிங்கத்தில் வால் போல இதன் வாலும் நீண்டு இருக்கும். முகத்தில் பிடரி மயிர் காணப்படும். சாதாரண குரங்குகளை போல இவை மனிதர்கள் இடத்தில நெருங்குவதில்லை. வனம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளவதால் இவற்றின் வாழ்க்கை முறையில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகின்றன.


மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இவை மிச்சம் இருப்பதால் துரிதமான சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவற்றை காப்பாற்ற முடியும். குறிப்பாக வனத்துறையினர் புதிய மரக்கன்றுகளை நடும் போது இவற்றின் உணவுச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல மரக்கன்றுகளை நட வேண்டும். இந்த விலங்குகளின் போக்குவரத்தில் இடையூர் ஏற்படாதவண்ணம் போக்குவரத்தை வனப்பகுதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

Jan 20, 2011

புலிகளும் புரிதலும்

புலிகளின் பாதுகாப்பு பற்றி சமீப காலங்களில் அதிகம் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற புரிதல் தெளிவாக விரிவாக விவாதிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, "கூண்டில் அடைத்து வைத்தே புலிகளை பாதுகாத்துவிட முடியும்போது அதற்கு ஏன் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஒரு கேள்வி கூட வருகிறது. மேலும் புலிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற மிருகங்களுக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் எழக் கூடும். 
 
 
 
 
புலிகளின் பாதுகாப்பிற்கு முதலில் சொல்லப்படும் காரணம், இந்த உலகில் இல்லாத ஒரு உயிரினத்தை நம்மால் பாதுகாத்து விட முடியாது. இருக்கும்போதே இந்த உயிரினத்தை பாதுகாத்துவிட வேண்டும். இது மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அறிவியல் சொல்வது வேறு. புலிகளின் பாதுகாப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றின் குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். 
  • புலி தனித்து வாழும் மிருகம்.
  • புலிகள் தனக்கென்று ஒரு எல்லையை காட்டில் தீர்மானித்துக் கொள்கிறது. சிறுநீர் கழிப்பதன் மூலமும், மரங்களில் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்ற புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது.
  • தனக்குக் கிடைக்கும் உணவின் தேவைகளைப் பொருத்து (மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி மற்றும் பல) தன்னுடைய எல்லைகளைத் தீர்மானிக்கிறது.
  • உணவு எளிதாகக் கிடைக்குமிடங்களில் எல்லையை சுருக்கவும், உணவு அரிதாக கிடைக்கும் இடங்களில் எல்லையைப் பரப்பவும் கற்றுக்கொள்கிறது.
  • எனவே புலிகள் பாதுகாப்பாக வாழ போதுமான உணவு அவசியமாகிறது. இதனால் புலிகள் பாதுகாக்கப்படும்போது புலிகளின் உணவு சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படுகிறது. அந்த உயிரினங்கள் வாழ அவற்றின் உணவு சார்ந்த தேவைகளும் பாதுகாக்கப்படுகிறது. இது உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க உதவுகிறது.
  • எப்போதாவது அரிதாக இணை சேருகிற புலி சில தினங்களுக்குப் பிறகு  பிரிந்து செல்கிறது.
  • புலிகள் வாழ அடர்ந்த வனப் பகுதியும், நீர்த் தேவைகளும், மனித இடையூறுகள் அற்ற பகுதியும் தேவைப்படுகிறது. 
வேட்டையாடுவதன் மூலம் புலிகள் அழிக்கப்படுவதால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக அறுபடும். காட்டின் ஆரோக்கியம் குறையும். காடு தன்னுடைய தரத்தை இழக்கத் தொடங்கும். பின் காடு சுருங்கத் தொடங்கும். காடு சுருங்கச் சுருங்க மழை குறையும். மழை குறைந்தால் நீர்ப் பற்றக்குறை அந்த காடுகளையும், ஆறுகளையும் சார்ந்த அழிவை நோக்கி வேகமாக நகரத் தொடங்கும். 
 
 
எனவே புலிகளையும் மற்ற விலங்கினங்களையும் வேட்டையாடுவதைத் தவிர்த்து, வனமும், விலங்குகளும், பறவைகளும் மற்ற அனைத்து உயிரினங்களும் காக்கப்படுவது அவசியமாகிறது.

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதனுக்கு மட்டுமல்ல; புலிகளுக்குமானது.

Jan 19, 2011

என் இறக்கை எங்கே? நானும் பறப்பதற்கு

 
 
India - Tamil: நண்பர் சுகியன் இயக்கிய "என் இறக்கை எங்கே? நானும் பறப்பதற்கு" என்ற குறும்படம் பார்த்தேன். நாம் ஒவ்வொருனாளும் கடந்து செல்லும் மனிதன் பற்றிய படம் தான் கதை. இதுவரை இப்படிப்பட்ட மனிதர்களை வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. நண்பர் சுகியன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். 
 
 
பிச்சைக்காரனுடைய வாழ்கை எப்படி இருக்கும் என்று ஊடுருவி கதை களம் ஆக்கியிருக்கிறார். இன்னும் சிறப்பான படங்களை எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நடிகனாக சுகியன் மிளிர்வர் எனத் தோன்றுகிறது.
 
 

Jan 18, 2011

Truth About Tigers




"புலிகளின் ரகசியங்கள்" (Truth About Tigers) என்ற இந்த ஆவண திரைப்படம் புலிகளின் பாதுகாப்பு குறித்து பேசுவதோடு, புலிகளின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு தனி மனிதனும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பேசுகிறது. புலிகளின் குணங்கள் மற்றும் அவற்றின் வாழ்கை முறை குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் திரு. சேகர் தத்தாத்ரி புலிகளின் பாதுகப்பிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து  வருபவர். பல இடங்களில் இந்த திரைப்படம் இலவசமாக திரையிடப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பிரதி வேண்டுவோர் http://www.truthabouttigers.org/home/ என்ற இணையதளத்தை அணுகலாம். 
 
 
 

Jan 14, 2011

சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை

சிறுத்தைப் புலிகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் சிவிங்கப்புலிக்கும் சிறுத்தைப் புலிகளுக்குமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சிவிங்கப்புலிகள் இன்று இந்திய வனப் பகுதிகளில் இருந்து முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. இன்றைய இந்திய வனப் பகுதிகளில் இருப்பது சிறுத்தைப்புலி மட்டுமே. 
சிவிங்கப்புலிகள் தென் ஆப்ரிக்க பகுதியில் தொடங்கி இந்திய வனம் வரை பரவி இருந்தது. அனால் இன்று ஆப்ரிக்காவில் மற்றும் ஈரானில் (மிக குறைந்த அளவில் ஆசிய சிவிங்கப்புலிகள் இங்கு மட்டுமே) மட்டுமே உள்ளது. மாறாக சிறுத்தைப் புலி தென் ஆப்ரிக்க தொடங்கி இந்திய வனம் மட்டுமல்லாது ரஷ்யாவின் கிழக்கு பகுதி முதல் கம்போடிய , லாவோ பகுதி வரை பரவி உள்ளது. ஆனாலும் தொடர் வேட்டைகளால் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
சிவிங்கப்புலி உடலில் கரும் புள்ளிகள் உடல் முழுவதும் இருக்கும். ஆனால் சிறுத்தைப் புலியின் உடலில் தலை மற்றும் கழுத்து பகுதியில் கரும் புள்ளிகளும், உடல் பகுதியில் ரோஜா இதழ்களின் மடிப்பு போன்ற கரும் பட்டைகளும் (பல கோண வடிவம் ) இருக்கும். சிவிங்கப்புலி அளவுக்கு சிறுத்தைப் புலிகளால் ஓட முடியாது.

அதே போல சிறுத்தைப் புலிகள், ஜாக்வார் (வேங்கை புலி ) போல இருந்தாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஜாக்வார் உடலில் இருக்கும் பல்கோண வடிவ கரும் பட்டைகள் சிறுத்தைப் புலிகளை விடப் பெரியதாக இருக்கும்.
165 செ.மீ நீளமும் 80 செ.மீ உயரமும் இருக்கும் சிறுத்தைப் புலி, 91 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். தன் உடலின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட உணவை மரத்தின் மேல் கொண்டு செல்லும் வலிமை உடையது. பொதுவாக மரத்தில் மேல் அமரும் சிறுத்தைப் புலி, தன் உணவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க, மரத்தின் மேல் கொண்டு செல்லும். சிறுத்தைப் புலிகளின் வாழ்விடங்களைப் பொருத்து அவற்றின் நிறத்தில் சிறிய மாறுபாடு காணப்படும். நிறக் குறைபாடு காரணமாக, உடல் முழுவதும் கருமை  நிறத்தில் இருக்கும் சிறுத்தை புலி, கருஞ்சிறுத்தை என்றழைக்கப்படுகிறது.
பொதுவாக சிங்கமும் புலியும் ஒரே வனப்பகுதியில் வாழாது. சிங்கம் வாழ சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ஆனால் சிறுத்தைப் புலி இந்த இரண்டு விலங்குகளும் வாழும் வனப் பகுதிகளில் வாழும் தன்மை பெற்றது. நான்கு மாத பேறுகாலத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை போடும். ஆனால் அவற்றின் ஐம்பது சதவீதம் மட்டுமே முதல் வருடத்தைக் கடக்கின்றன.
உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறும் சிறுத்தைப் புலிகளை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் மட்டுமே இயற்கையை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

Jan 12, 2011

The Road Home


China - Simplified Chinese: "The Road Home" என்கிற சீன மொழி திரைப்படம் பார்த்தேன். ஆர்பாட்டமில்லாத அற்புதமான காதல் கதை. பகிர்ந்து கொள்ளப்படாத காதல் உடைகிற நொடி அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கிறது. படம் முழுக்க காதல் மட்டுமே நிரம்பி வழிகிறது. சோக திணிப்புகள் ஏதுமில்லை. கதாநாயகியின் கண்கள் போலவே நம் கண்களும் குளிர்ச்சிஅடைகின்றன.

Jan 11, 2011

The Boy in the striped Byjamas


 "The Boy in the striped Byjamas" என்ற திரைப்படம் பார்த்தேன். ஹிட்லர் காலத்தின் கொடுமைகளை இரண்டு சிறுவர்களுக்கு இடையேயான நட்பின் மூலமாக சொல்கிறது படம். யூத சிறுவன் படும் கஷ்டங்களை அந்த சிறுவனின் நடிப்பும் மூலமாகவே உணர வைக்கிறார்கள். ஹிட்லரும் முகத்தை படத்தில் கான்பிக்கவிட்டாலும் அவன் மீது மிகப்பெரிய கோபத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. படத்தின் இறுதியில் யாருடைய மனமும் கனத்து நிம்மதி இழந்து போகும். 

Jan 8, 2011

Children of Heaven


Iran - Persian :"Children of Heaven" என்ற பெர்சியன் மொழி திரைப்படம் பார்த்தேன். தங்கையின் காலணியை தொலைக்கும் அண்ணன், வறுமையில் வாடும் தன் அப்பாவிடம் சொல்ல பயந்துகொண்டு, அண்ணன் தங்கை இருவரும் ஒரே காலணியை பயன்படுத்துகிறார்கள். ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடம் பெற்றால் காலணிகள் கிடைக்கும் என்று அதில் பங்கு பெறுகிறான் அண்ணன். 
 
தங்கைக்காக  ஓடுகிறான். பூங்காவில் வீசும் மாலை நேரத்து தென்றல் போல நம்மை வசீகரிக்கிறது திரைகதை. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.



The Return



"The Retrun" பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு வரும் தந்தை தன் இரண்டு மகன்களையும் கூடிக்கொண்டு பயணம் செல்கிறார். படம் முழுக்க ஏதோ ஒரு மர்மம் புகைந்தபடியே திரைக்கதை நகர்கிறது. அழகான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படம். பல இடங்களில் காட்சிகள் நீண்டு கொண்டே போவதை தவிர்த்திருக்கலாம்.

Jan 7, 2011

The Way Home



North Korea - Korean "The way Home" என்கிற கொரியன் மொழி திரைப்படம் பார்த்தேன். தனிமை, முதுமை, வறுமை என்கிற சூழலுக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு கிழவியின் கதை. ஒரு பாட்டிக்கும் அவள் பேரனுக்கும் ஆன உறவை பற்றி சொல்லும் படம். படத்தை பார்க்கும் போது முதுமையை பற்றிய பயம் ஏற்படுகிறது. தன்னுடைய பேரன் எத்தனை சிரமங்கள் செய்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும்  அவருடைய நடிப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. வன்முறையோ சோக திணிப்புகளோ இல்லாத படம், நிச்சயமாக உறக்கத்தை கெடுக்கிறது.

Jan 6, 2011

Spring, Summer, Fall, Winter and Spring


"Spring, Summer, Fall, Winter and Spring" ஒரு துறவியிடம் வந்து சேரும் சிறுவனின் வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதே கதை. தவளையை துன்புறுத்துவது முதல் ஒரு பெண்ணை கொலை செய்வது வரை எல்லா தவறுகளையும் செய்யும் ஒருவன் இறுதியில் துறவியாக மாறுகிறான்.

ஒவ்வொரு பருவ மாற்றத்தின் போதும் நகரும் கட்சிகள் அழகு. மடத்திற்கு வரும் பெண்ணை காதலிக்கும் போது அதை துறவி இது இயற்கை என்று சொல்லும் இடம் அற்புதம். ஒவ்வொரு தவறுக்கும் அவன் அனுபவிக்கும் தண்டனைகள் அவன் மனதை மாற்றுகிறது. வசந்தத்தில் தொடங்கி வசந்தத்தில் முடிகிறது படம்.  

Jan 5, 2011

வீழ்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள்

உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணமுடியாத இந்த வரையாடு தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் நீலகிரியை ஒட்டிய பகுதிகளில் வாழும் இவை மிகவும் அரிதான விலங்காக மாறியிருக்கிறது. 80  கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட இந்த வரையாடு சுமார் 1200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடங்களில் வாழ்கிறது. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கிறது. பழனி மலை பகுதிகளிலும் அரிதாக காணப்படுகிறது.


இந்த விலங்கை வேட்டையாடுவது தடை செய்யபட்டிருக்கிறது. நிறைந்த புல்வெளிப்பகுதிகள் இவற்றின் வாழ்வுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. தற்சமயம் வெறும் 2000 வரையாடுகள் மட்டுமே இருப்பது மிகவும் வருதத்திற்க்குரிய  செய்தி.



International Union for Conservation of Nature தகவலின் படி இந்த விலங்கு அருகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். ஆண் பெண் இரண்டுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. இமாலய காட்டாடு மற்றும் அரேபிய காட்டாடு தவிர்த்து வனத்தில் வாழும் முக்கியமான ஆடு இதுவாக இருக்கிறது.

இவற்றை பாதுகாக்க மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. வேட்டைகளில் இருந்து இவற்றை பாதுகாக்க இந்த வரையாடு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவேண்டும்.