Jan 20, 2011

புலிகளும் புரிதலும்

புலிகளின் பாதுகாப்பு பற்றி சமீப காலங்களில் அதிகம் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற புரிதல் தெளிவாக விரிவாக விவாதிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, "கூண்டில் அடைத்து வைத்தே புலிகளை பாதுகாத்துவிட முடியும்போது அதற்கு ஏன் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஒரு கேள்வி கூட வருகிறது. மேலும் புலிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற மிருகங்களுக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் எழக் கூடும். 
 
 
 
 
புலிகளின் பாதுகாப்பிற்கு முதலில் சொல்லப்படும் காரணம், இந்த உலகில் இல்லாத ஒரு உயிரினத்தை நம்மால் பாதுகாத்து விட முடியாது. இருக்கும்போதே இந்த உயிரினத்தை பாதுகாத்துவிட வேண்டும். இது மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அறிவியல் சொல்வது வேறு. புலிகளின் பாதுகாப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றின் குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். 
  • புலி தனித்து வாழும் மிருகம்.
  • புலிகள் தனக்கென்று ஒரு எல்லையை காட்டில் தீர்மானித்துக் கொள்கிறது. சிறுநீர் கழிப்பதன் மூலமும், மரங்களில் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்ற புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது.
  • தனக்குக் கிடைக்கும் உணவின் தேவைகளைப் பொருத்து (மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி மற்றும் பல) தன்னுடைய எல்லைகளைத் தீர்மானிக்கிறது.
  • உணவு எளிதாகக் கிடைக்குமிடங்களில் எல்லையை சுருக்கவும், உணவு அரிதாக கிடைக்கும் இடங்களில் எல்லையைப் பரப்பவும் கற்றுக்கொள்கிறது.
  • எனவே புலிகள் பாதுகாப்பாக வாழ போதுமான உணவு அவசியமாகிறது. இதனால் புலிகள் பாதுகாக்கப்படும்போது புலிகளின் உணவு சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படுகிறது. அந்த உயிரினங்கள் வாழ அவற்றின் உணவு சார்ந்த தேவைகளும் பாதுகாக்கப்படுகிறது. இது உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க உதவுகிறது.
  • எப்போதாவது அரிதாக இணை சேருகிற புலி சில தினங்களுக்குப் பிறகு  பிரிந்து செல்கிறது.
  • புலிகள் வாழ அடர்ந்த வனப் பகுதியும், நீர்த் தேவைகளும், மனித இடையூறுகள் அற்ற பகுதியும் தேவைப்படுகிறது. 
வேட்டையாடுவதன் மூலம் புலிகள் அழிக்கப்படுவதால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக அறுபடும். காட்டின் ஆரோக்கியம் குறையும். காடு தன்னுடைய தரத்தை இழக்கத் தொடங்கும். பின் காடு சுருங்கத் தொடங்கும். காடு சுருங்கச் சுருங்க மழை குறையும். மழை குறைந்தால் நீர்ப் பற்றக்குறை அந்த காடுகளையும், ஆறுகளையும் சார்ந்த அழிவை நோக்கி வேகமாக நகரத் தொடங்கும். 
 
 
எனவே புலிகளையும் மற்ற விலங்கினங்களையும் வேட்டையாடுவதைத் தவிர்த்து, வனமும், விலங்குகளும், பறவைகளும் மற்ற அனைத்து உயிரினங்களும் காக்கப்படுவது அவசியமாகிறது.

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதனுக்கு மட்டுமல்ல; புலிகளுக்குமானது.

9 comments:

  1. சுருக்கமான, ஆனால் தெளிவான விளக்கம் சகோ 🤍

    ReplyDelete
  2. Short and sweet!! Very well explained 😍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    ReplyDelete
  3. Short and sweet!! Very well explained 😍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    ReplyDelete
  4. மிகவும் அருமை...👌👌👌

    ReplyDelete
  5. எளிமையான விளக்கம் நன்றி சதீஷ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மது 🙏
      தொடர்ந்து வாசிப்பதற்கும் நன்றி 🐅

      Delete

Would you like to follow ?