Aug 31, 2021

சிற்றெழால்

இடவலம் நகராது 

சிறகுகள் படபடக்க 

காற்றில் நிலைத்தபடி 

இரையை கூர்நோக்கும் 

சிற்றெழால் 




கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றொழல்

இருவாச்சி

Aug 27, 2021

இருவாச்சி [Great Hornbill]

தொண்டைக்குழியில் சேர்த்துவைத்த 

அத்திப்பழங்களை 

லாவகமாக எடுத்து 

கூட்டில் காத்திருக்கும் 

இணைக்கும் குஞ்சுகளுக்கும் கொடுத்துவிட்டு 

மீண்டும் அடர்வனம் திரும்பும் 

இருவாச்சி 

காட்டை வளப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 



கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி





Aug 26, 2021

பலாவின் சுவை

 சுளைகள் நீக்கப்பட்ட

பலாவின் தோலை

குப்பையிலிருந்து

பொறுக்கி எடுக்கும் யானை

தன் குட்டிக்கு

எப்படி புரியவைக்கும்

Aug 20, 2021

யாருக்கானது பூமி? - விமர்சனம் - 4

நன்றி காந்திமதி. 

-------‐--------


நூல் : யாருக்கானது பூமி ?

நூலாசிரியர் : பா. சதீஸ் முத்து கோபால்

பதிப்பகம் : காக்கைக் கூடு

பக்கங்கள் :207


விலங்கு-பறவை-மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தை தவிர்த்து, மனிதன் தனியா தனக்கான இடங்களை உருவாக்க முயலும்பொழுது உருவானது இட அழிப்பு. அவை இன்றுவரை பல வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது.


பறவைகள், விலங்குகள் குறைவதற்கு மிக முக்கிய காரணம் அவற்றின் வாழிட அழிப்பே ஆகும்.


மனிதர்கள் குரல் உயர்ந்து, பறவைகள் குரல் தாழ்ந்து காணப்படும் இந்த காலத்தில் சதீஸ் முத்து கோபால் பறவைகளையும், விலங்குகளையும் தேடி சென்று அவற்றின் குரல்களை கேட்டு வருகிறார்.


நிலம், நதிகள், வானம், கடல், மலைகள் யாவுமே உயிர்கள்வாழ இயற்கை படைத்தது.....


"பறவையைக்கண்டான், விமானம் படைத்தான்! "என்கிற திரையிசைப்பாடல் பறவைகளின் பறத்தலை வியக்கிறது. மனிதனுக்குள் பறக்கும் ஆவலைத் தூண்டுகிறது! 

பறவையைக் கண்டு விமானம் படைத்த மனிதன் பறவைகளின் பங்களிப்பை உணரவில்லை....


பறவைகளைப் பார்ப்பதும், அதன் வாழ்வை, பழக்கவபழக்கவழக்கங்களை புரிந்து கொள்வதும்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடிப்படை. அதன் பிறகுதான் "யாருக்கானது பூமி?" என்கிற கேள்வி பிறக்கும். விடையும் கிடைக்கும்!


நாம் பார்த்து மகிழ்ந்த இயற்கையை வரும் தலை முறைக்கும், வளரும் தலைமுறைக்கும் கையளிக்க வேண்டும்


சூழலை காக்க, காடுகளை காக்க, காட்டுயிர்களை காக்க, நம் தலைமுறைகளை காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.....


இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை சங்க இலக்கியங்களில் அறிய முடிகிறது.....


எல்லா உயிர்களுக்குமான இந்த பூமியை நாம் அபகரிக்க நினைத்தால் அது மனித இனத்திற்கே பேராபத்தாக முடியும்...


நம் அடுத்த தலைமுறைக்காக இந்தப் புவியை காக்க வேண்டிய கடமை உணர்வும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டும்.....


காடு, சரணாலயம், மலை போன்ற இடங்களுக்கு பயணம் சென்று அங்கு ஏற்பட்ட அனுபவங்களை விரிவாக எழுதி செல்கிறார். ....


பலவித பறவைகளை நமக்கு அறிமுகப்படுத்தி படங்களுடன் தமிழ், ஆங்கில பெயர்களை கொடுத்து இருப்பது சிறப்பு.


காடு அழிப்பு, புலிகள் கணக்கெடுப்பு, பறவைகளை பார்த்தல், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.... 


சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஆவலும், அதைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் .....


நம்மால் இயன்றதை செய்வோம்..... இயற்கையை பாதுகாப்போம்......


Aug 19, 2021

யாருக்கானது பூமி? - விமர்சனம் - 3

 

நன்றி சாய் வைஷ்னவி..!!!

----‐--------------------------------------------

அமாவாசையைத் தவிர மற்ற நாட்களில் காகங்களை கவனித்திருக்கீர்களா? கோழியை தவிர வேறு பறவைகளை எப்போதாவது உற்று நோக்கியிருக்கிறீர்களா? மரத்தில் அமர்ந்து கீச்சிடும் அவற்றின் குரலுக்கு அர்த்தம் புரிந்திருக்கிறதா? சிடுக் சிடுக்கென இங்குமங்கும் தாவிப்பறந்து அவை எங்கே செல்கின்றன என சிந்தித்ததுண்டா? நாம் அறியாமல் நம் வாழ்வோடு ஒன்றியிருக்கும், நமக்கு உயிரூட்டி வாழ வைப்பது நாம் பெயர் கூட அறிந்திராத இந்த பறவைகளாகிய கடவுள்கள் தான். ஆம் மனிதனை வாழவைப்பது இயற்கை என்றால் இயற்கையை சமன்படுத்தும் இந்த பறவைகள்தான் மனிதனின் கடவுள்.
'யாருக்கானது பூமி'? _ சதீஷ் முத்து கோபால் அவர்களின் பறவைகள் மற்றும் சூழலியல் சார் கட்டுரை தொகுப்பு. பல்லுயிர், பறவைகள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் இவர். ஆண்டு விழாவின் முதல் புத்தக தலைப்பு கேட்டதும் இவரின் கட்டுரை தொகுப்பே நினைவு வந்தது. என் தேர்வு நிச்சயம் என்னையும் நாலு பேரையும் நல்வழிப்படுத்தட்டும்.
வெறும் பறவைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரை என்றுதான் நினைத்தேன். உள்ளே சென்றால் ஒவ்வொரு பக்கங்களிலும் தகவல்களை கடந்து அவர் கண்ணால் கண்டும் உணர்ந்தும் வியந்த , வேதனை அடைந்த உயிர்கள் மற்றும் வனங்கள் பற்றிய அனுபவங்களை அடுக்கி அடுக்கி அதில் மனிதர்களையும் அவர்களின் ஈனச்செயல்களின் விளைவுகளையும் எரியூட்டுகிறார்.
எத்தனை பறவைகள், எத்தனை விலங்குகளை நாம் பார்த்திருக்கிறோம்? ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா போனால் சில விலங்குகளை வாய்பிளக்க அதிசயமாக பார்த்து வருகிறோம். அவ்வளவுதான். உண்மையில் இவ்வுலகில் கோடிக்கணக்கான அரியப்படாத விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன. வாழ்ந்திருக்கின்றன. இந்நூலில் அவர் பயணித்த இடங்களின் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்களை அள்ளித் தந்திருக்கிறார். அவற்றில் ஒருசில வற்றின் புகைப்படமும் இரண்டொரு பக்கங்களுக்கு ஒன்றாக வைத்திருப்பது ஏதோ காட்டுயிர்கள் பற்றிய குரும்படம் போல தோன்றுகிறது.
காட்டுத்தீ பற்றிய விழிப்புணர்வு, வனவிலங்குகள் கணக்கெடுப்பு, பறவைகளை அறியும் ஆர்வம் இவையே இவரை காடுகளை நோக்கி ஓயாமல் நடக்கவைத்திருக்கவேண்டும்.
#தமிழில் பறவைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. அது ஒரு பறவையை பற்றிய அறிவியல். இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு. நம் மக்கள் அதை முறையாக பயன்படுத்தாமல் எல்லா பறவைகளையும் 'குருவி'என்றே சொல்லப் பழகிக் கொண்டார்கள்.#
விளைநிலங்கள் தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொள்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் அவற்றின் வாழிடத்தையும் அழித்துவிட்டு உணவிற்காக ஊருக்குள் வரும் உயிரை கொல்லுதல் என்பது கொடும் வன்மம்.
#சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இன்னும் நம்முடைய அரசியல் களம் விவாதிக்கக்கூட தொடங்கவில்லை. எந்த தேர்தல் அறிக்கையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தோ காடுகள் பாதுகாப்பு குறித்தோ பேசுவதில்லை. காடுகள் இன்றி நீர் இல்லை. நீர் இன்றி மனிதனும் இல்லை. எனில் காட்டின் பாதுகாப்பு எவ்வளவு அவசியமானது?மக்களும் இலவசங்களுக்கு அடிமையாகி தொலைநோக்கு இல்லாத அரசியலுக்கு பழகி வருவது வேதனை தருகிறது#
மனிதர்களுடைய தவறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டுயிர்களை கடுமையாக பாதிக்கிறது.'காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது. சிலர் மரங்கள் கோடைகாலத்தில் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படுவதாக நம்புகின்றனர். இது முற்றிலும் தவறு.காட்டுத்தீ ஏற்படுவதற்கு முழுமுதல் காரணம் மனிதன். மலைபிரதேசங்களுக்கும் , வனங்களுக்கும் செல்லும் மனிதர்கள் புகைப்பிடிக்கும் போது தீக்குச்சியையோ ஊதித்தீர்த்த சிகரெட்டை அணைக்காமலோ அப்படியே போட்டு வருவது ஒரு விளையாட்டு. அது இறுதியில் அவனுக்கு அவனே வைத்துக் கொள்ளும் கொல்லி என்பது அவன் அறிவதில்லை. காடு தீப்பற்றி எரிந்து பல்வகை உயிரினங்களும் தீயில் சாம்பலாவதோடு உயிரோடிக்கும் விலங்குகள் பறவைகளுக்கும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுத்துகிறது.
மரங்களை வெட்டி, காடுகளை அழித்து, பாறைகளை குடைந்து , நீர்நிலைகளை மாசுப்படுத்தி , கண்ட புகைகள் மூலம் பருவநிலையை மாற்றி மழை பெய்வதை தடுத்து, அணைகள் கட்டி ,மட்காத ஞெகிலிப் பைகளை கொட்டி சூழலை வதைத்து என மனிதன் செய்யும் ஒவ்வொரு நாசவேளைக்கும் இரையாவது வனவிலங்குகள்தான்.
#இயற்கையை பாதுகாக்க தவறிய நாம் அதை அழிப்பதை மட்டும் தொடர்ந்து செய்கிறோம். பழனி மலைத்தொடரில் மட்டுமே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. அணைகள் கட்டுவது மட்டுமே நீரின் தேவையை பூர்த்தி செய்துவிடாது. காடுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
#அயல் தாவரங்கள் பெருகியதால் காடுகள் மழைக்காலத்தில் சேமித்து கோடைகாலத்தில் நமக்கு விடுவிக்கும் நீர்சுழற்சி பாதிப்புக்குள்ளாகிறது. சீமைக்கருவேலம், தைல மரங்கள், பைன் மரங்கள் அதிகளவில் பெருகி விட்டன. கொடைக்கானல் பகுதியில் பைன் மரக்காடு சுற்றுலா தளமாகிவிட்டது. அங்கு மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
#சுற்றுலா பயணிகள் மது அருந்துவதும், குரங்குகளுக்கு உணவு தருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. காடுகளின் மகத்துவம் தெரியாத இதுபோன்ற மனிதர்களை காடுகளுக்குள் அனுமதிப்பதே தவறு. யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு மேலும் காடுகளுக்குள்ளும் போய் அவற்றிற்கு உபத்திரவம் கொடுத்தால் அவை ஊருக்குள் வராமல் வேறு எங்கு போகும்? ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் குடித்து வாழவேண்டிய இந்த யானைகள் இப்படி பல்வேறு காரணங்களால் துரத்தப்படுகின்றன.
இயற்கை சூழல் மிகுந்த அற்புதமான காடுகள் தான் நமக்கு மழையை கொண்டு வருகின்றன. ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமானாதால் காடு நாசமடைகிறது வாகனங்களில் வருபவர்களின் கூச்சலும் இரைச்சலும் காட்டின் அமைதியை குழைத்து உயிர்களை பயம்கொள்ள செய்கிறது. அவர்கள் உண்டு எறியும் தின்பண்டங்களும் பிளாஸ்டிக் பைகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. உடைந்த மதுப்பாட்டில்கள் உயிரினங்களுக்கு ஊரு விளைவிக்கிறது.ஞெகிலிப் பைகளும், தண்ணீர் குப்பிகளும் குப்பையாக கொட்டிக்கிடக்கின்றன. இதில் இன்னும் சில ரெசார்ட்களை வேறு திறக்கப்போகிறார்களாம். சுற்றுலா பயணிகள் தரும் உணவுகளை தின்கின்றன சில பறவைகள். பழங்களையும் கொட்டைகளையும் தின்று தன் எச்சத்தின் மூலம் மரங்கள் காடுகளை உற்பத்தி செய்யும் பறவைகள் இதுபோன்ற உணவுகளை தின்பதால் சுற்றுச்சூழலில் தன் பங்கை செய்ய முடியாமல் போகிறது.
ஐரோப்பா வரை இவரின் பறவைகள் குறித்த பயணங்கள் சென்றாலும் நம் உள்ளூரில் குவிந்துள்ள இயற்கை அழகுக்கே பறவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.இவர் பறவைகளை தேடிப்போன, கண்டறிந்த இடங்களின் பட்டியல்,
1.பிலிகிரி ரெங்கன் பெட்டா_கர்நாடகா
2.காவேரி வனவிலங்கு சரணாலயம்
3.கொங்கூர்_பழனி
4.கோதைமங்களம்_பழனி
5.ஶ்ரீரங்கப்பட்டினம்_கர்நாடகா
6.ரங்கன திட்டு சரணாலயம்
7.ஹெப்பால் ஏரி
8.பழனி மலைத்தொடர்
9.பேரிஜம்_கொடைக்கானல்
10.பிரம்மகிரி
11.நாகர்ஹோலே
12.பரத்பூர்
13.பத்ரா வனப்பகுதி
14.சத்தியமங்கலம் வனப்பகுதி
15.சோழிங்கநல்லூர்_சென்னை
16.சுவிட்சர்லாந்து
#கடற்கரையிலும் கழிமுகங்களிலும் மணல்களில் குழிபறித்து முட்டையிடும் ஆமைகள் அவற்றை அடைகாப்பதில்லை. சரியான வெப்பநிலையில் பொறிக்கப்படும் குஞ்சுகள் தாமாகவே வெளிவந்து கடலை நோக்கி செல்கின்றன. காரணம் கடலிலிருந்து வரும் ஒளியால் அவைகள் ஈர்க்கப்படுவதுதான். ஆனால் இன்று செயற்கை வெளிச்சம் கடலைவிட அதிகமாக இருப்பதால் அவை நகரங்களை நோக்கி வந்து மனிதர்களால் பலியாகின்றன. இவற்றை தடுக்கவே ஆமைகள் காப்பகங்கள் செயல்பட்டு முட்டைகளை சேகரித்து பொரித்ததும் கடலில் விட்டுவிடுகின்றனர். இது பாராட்டத்தக்க செயல்.
கிட்டத்தட்ட இருநூறு அதற்கும் மேற்பட்ட பறவைகளின் பெயர்களையும் சில படங்களையும் பட்டியலிட்டு இருக்கிறார். அதில் கேள்வி பட்டிராத மிகச்சில பெயர்கள் இங்கே,
1.வெண்புருவக் கொண்டைக்குருவி
2.அரசவாலன்
3.செவ்வரி நாரை
5.அரிவாள் மூக்கன்
6.பவளக்கால் உள்ளான்
7.பட்டாணி உப்புக்கொத்தி
8.நீல தாழைக்கோழி
9.நத்தை குத்தி நாரை
10.கரண்டிவாயன்
சாமான்ய மனிதன் முதல் பொறுப்பில் இருப்பவர்கள் பலரிடமும் மாற்றம் வரவேண்டியது அவசியமாகும். நாம் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம் என்ற பயமும் நம் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியை காக்க வேண்டிய கடமையும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
காடுகளுக்கு சுற்றுலா செல்லும்போதும் நம்மை சுற்றியுள்ள சூழலை முடிந்தவரை மாசுப்படுத்தாமல் இருந்தாலே உணவுச்சங்கிலி அதன் இயல்பில் இருக்கும். நம் வீட்டில் அந்நியர்கள் வந்து வீட்டை நாசப்படுத்தி நம்மையும் துன்புறுத்தினால் எப்படி உணர்வோமோ அதையேதான் மற்ற உயிரினங்களும் உணரும் என்று புரிந்துகொள்வதே அறிவு. முடிந்தவரை பாதிக்கப்பட்ட சூழலை சமன்படுத்தியும் இன்னும் மிச்சமிருக்கும் சூழலை பாதுகாத்தும் வாழ்ந்தாலே போதும். இந்த தலைப்பை கொடுத்ததற்காக குழுவினருக்கு நன்றி.
காக்கைக்கூடு பதிப்பகம்
விலை 170.
To order:



Aug 18, 2021

யாருக்கானது பூமி? - விமர்சனம் - 2

நன்றி சந்திர கலாவதி...!!!

----‐--------------------------------------------

யாருக்கானது பூமி?
சூழலியல் கானுயிர்க்காப்பு பறவையியல் கட்டுரைகள் .
பா.சதீஷ் முத்து கோபால்
அண்டங்கள் வெடித்து சிதறிய ஒரு துளி நம் பூமி!ஒரு செல் ஜீவராசியிலிருந்து,மனிதர்கள் வரை பரிணாம வளர்ச்சி!கூடவே காடுகள்,மலைகள்,மரங்கள்,கடல்,நதி !மனிதன் விலங்குகளுடனும்,பறவைகளுடனும் இணைந்து வாழ்ந்தான்!நாடோடியாக அலைந்து திரிந்த வாழ்க்கை!மனிதன் என்று நிலையாக வாழ்தல் தொடங்கினானோ,தனக்கென வாழ்விடம் அமைக்க புறப்பட்டானோ,அப்போது ஆரம்பமானது பறவைகள்,விலங்குகளின் வாழ்விட அழிப்பு,ஆக்கிரமிப்பு.எழுந்தது கேள்வி யாருக்கானதுஇந்த பூமி?
பறவைகளின் குரல் குறைந்து ஒலிக்கும் இக்கால சூழ்நிலையில் பறவைகளைப் தேடி செல்லும் ஆசிரியர்!அதன் வாழ்விடங்களுக்கு செல்பவர்!அவைகளை கணக்கெடுப்பவர்!அழியும் நிலையில் உள்ள இனங்களின் மேல் அக்கறை செலுத்துபவர்! பல பறவைகளின் சரணாலயங்கள் சென்று,பறவைகளின் வகைகள்,உள்ளூர் பறவைகள்,வலசைப்பறவைகள் என இனம் காட்டுபவர்!அதன் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி எளிமையாக்கியவர்! காடுகள்,ஓடைகள்,மரங்கள் பறவைகளின் வாழ்வுக்கு ஆதாரநிலை என விளக்குபவர்!இவரின் கட்டுரைகள் தமிழக அரசின் பரிசை வென்று உள்ளது!
ஆசிரியர் பறவைகள் இயற்கையை இணைக்கும் ஒரு முக்கியசங்கிலி எனவும்,பறவைகள் எவ்வாறு தாவரங்கள் பெருகி வளர உதவுகின்றன,வேண்டாத ,பூச்சிகளை தின்று,சூழலை பாதுகாக்கிறதுஎனவும் பறவைகளின் முக்கியத்தை மக்கள் உணர இல்லை என வருத்தத்துடன் கூறுகிறார்.சுற்று சூழல் மக்களால் எப்படி மாசு படுகிறது,நெகிழியை அதிகம் பயன்படுத்தி குப்பைகளில் வீசி,சுற்று சூழலை மாசுபடுத்துகின்றனர்,காடுகளை அழித்தல்,மரங்களை வெட்டுதல்,நீர்நிலைகளை மாசுபடுத்துதல்,ஒலிபெருக்கிகள் சத்தமாக வைத்து அதிர்வுகளை ஏற்படுத்துதல் இவை அனைத்தும் பறவைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறார்.
மலையில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக,காட்டு தீயைப்பற்றி எடுத்து சொல்லி காடுகளை பாதுகாக்க ஆசிரியர் முயற்சி எடுக்கிறார் .காடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் புகை பிடித்தும் அணைக்காமல் போடுவது முக்கிய காரணம் என கூறுகிறார்.பல சரணாலயங்களுக்கு சென்று ,அங்கு காணப்படும் அரிய பறவைகள்,அங்கு வரும் வெளிநாட்டு வலசை பறவைகள்,ஆகியவற்றை வரிசைப்படுத்துகிறார்!
பழனி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது வேலுடன் குடியிருக்கும் முருகப்பெருமான்.ஆனால் இந்த நூலைப்படித்தவுடன்,தொடர்ந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்,அவற்றில் வளர்ந்துள்ள மரங்கள்,ஆங்காங்கே துள்ளி ஓடும் மான்கள்,பறவைகள்,அவற்றின் கீதங்கள்!
பழனியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கூர் குளத்திற்கு குளிர்காலத்தில் ஏராளமான பறவைகள் வருகிறது.
கௌதாரி(Grey francolin),பவளக்கால் உள்ளான்கள், மேக்கூட்டம் போல காணப்படும் சோளக்குருவிகள்(rosy starling),செவ்வரி நாரை,அரிவாள் மூக்கன்,போன்ற பறவைகளைப் ஆங்கு காணமுடியும்.
நாம் கருவேலமரங்களின் தீமையை உணர்ந்துஅவற்றை அழிக்க முயலும் போது ,பறவைகளுக்கு உகந்த மரம் நீர்க்கருவை மரம் .இந்த வேறுபாட்டை மக்கள் உணர வேண்டும் என கூறுகிறார்.இவை குளங்களின் காணப்படும்.பறவைகள் வரவும்,அமரவுமிந்த மரங்களின் அவசியத்தை சுட்டி காட்டுகிறார்!
பனை மரங்களில் ஆந்தைகள் வாழும்.அவை எலிகளை தின்று,விவசாயிகளுக்கு உதவும் என கூறி பனை மரங்களின் அவசியத்தை விளக்குகிறார்.குளங்களை மாசுபடுத்தக் கூடாது.பறவைகளை துன்புறுத்தல் கூடாது .இதை பாட புத்தகங்கள் மூலமும்,அரசாங்க அறிவிப்புகள் மூலமும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்.
பழனி அருகேஉள்ள கோதைமங்கலத்தில் உள்ள இரண்டு குளங்கள் பறவைகளின் சிறந்த வாழிடங்கள்!இந்த குளங்கள்,வறட்சி,குப்பை கூளங்கள்நெகிழிப்பொருட்கள்,இவற்றால் மாசுப்பட்டு அழியும் தறுவாயில் உள்ளதுஅருகில் ஓடும் சண்முக நதியின் நிலையும் இதுவே!அரசாங்கம் கவனம் கொண்டு சீர்படுத்த வேண்டும்.இங்கு ஏராளமான பறவைகள் வருகை தருகின்றன!
பெரிய ஆவுடையார் கோவில் போகும் வழியில் இந்த குளம் உள்ளது.இங்கு சாலையின் குறுக்கே ஓடும் கானாங்கோழிகள்(white breasted water hen)சுறு சுறுப்பாக அலைந்து திரியும் பஞ்சுருட்டான்(green bee eater)நாரைகள்(pond herons),கொக்குகள்(Egrets),அரிவாள் மூக்கன் பறவைகள்,கத்தியபடி வட்டமிடும் ஆள் காட்டி குருவிகள்,பூச்சிகளைப் பிடித்து கொண்டு இருக்கும் கரிச்சான் குருவிகள்(Black Drongo),உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும்,புள்ளி மூக்கு வாத்துகள்(spot filled duck),கிளைகளில் ஏறி அமர்ந்து இருக்கும் செந்நாரைகள்,(purple herons)குளத்தின் நடுவே உள்ள மணல் திட்டுகளில் அமர்ந்து இருக்கும் செங்கிழுவைகள்(lesser whistling ducks),நீருக்குள் ஓடி மறையும் முக்குளிப்பான்கள்(Little Gerbe),கூட்டமாக பறந்து திரியும் நீர்க்காகங்கள்,நாமக் கோழிகள்,நீலத்தாழைக்கோழிகள்,மிகப் பெரிய மீன் கொத்தி பறவைகள்,என பறவைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவித்ம் எனக் காணப்படும்!இந்த அழகிய அரிய பறவைகள் எப்போதும் வரவேண்டும் அருகிவிடக்கூடாது !இது அரசாங்கத்தின் கையிலும் நம் கையிலும் தான் உள்ளது!
குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்.காட்டு ஆமணக்கு என்ற புதர் செடிகள் குளங்களின் காணப்படுகிறது.இவை நீக்கப்பட வேண்டும்.பரவிக்கிடக்கும் ஆகாசத் தாமரை செடிகள் நீக்கப்பட வேண்டும்
காவேரி உருவாக்கி வைத்துள்ள அற்புதத்தீவான ஶ்ரீரங்கப்பட்டிணத்தின் வடமேற்கே அமைந்துள்ள ரங்கணத்திட்டு பறவைகள் சரணாலயம்,அழகிய, அரிய பறவைகள்,வலசை பறவைகள் வருமிடம்!
அரிவாள் மூக்கன் பறவைகள்,நத்தை குத்தி நாரைகள்,கரண்டி வாயன் இந்த மூன்றும் நீர் புலப்பறவைகள்.வித்தியாசமான அலகுகளைக் கொண்டது!
வக்கா பறவைகள்(Black crowned night heron)ஆற்று ஆலாக்கள்,அரச வாலன் என பல பறவைகள்! நாம் கேள்விப்படாதவை!ஆசிரியர் வருங்கால தலை முறைக்கு ஒரு ஆவணமே,வைத்துள்ளார்!
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ,பறவைகள் ,விலங்குகள் பற்றியும்,காடுகள் எவ்வளவு அவசியம்,குறிப்பிட்ட இடங்களில் சாலைகளை அமைத்து அமைதியை குலைக்க கூடாது அது பறவைகளையும்,விலங்குகளையும் எப்படி பாதிக்கிறது
என்பதையும் அழகாக கூறுகிறார்.அத்தி மரத்தின் பொந்துகளில் முட்டைகளை வைத்து ,தாய் பறவை உள்ளே சென்றவுடன்,ஆண் பறவை மண் வைத்து பூசி ஒரு சிறியதுளையுடன் பாதுகாக்கிறது என்ற அற்புதத்தை விளக்குகிறார்.
காடுகளை துண்டாடுவது எப்படி விலங்குகளை பாதிக்கிறது,ஒரே இனத்துக்குள் இனப்பெருக்கம் ஏற்படுவதால் விலங்குகள் எண்ணிக்கையிலும் வலிமையிலும் குறைந்து காணப்படுவது,விலங்குகள் நடமாடும் பகுதிகளில் சாலைகளை அமைப்பது அவைகளுக்கு எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது எனவும்,குறிப்பிட்ட மரங்களின் அழிவு எப்படி பறவைகள் இனங்களைப் பாதிக்கிறது,நெகிழிப்பொருட்கள் எப்படி சுற்று சூழலை மாசுப்படுத்தி, பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன என்பதையும் விளக்குகிறார்.
நாகர்ஹோலே வனப்பகுதி.இதன் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கே.எம்.சின்னப்பா!இப்போது ஒரு சிறந்த புலிகளின் சரணாலயமாக விளங்குகிறது!இங்கு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிக்காக ஆசிரியர் சென்றார்.அங்கு காணப்படும் விலங்குகளை அட்டவணைப்படுத்துகிறார்.
கீரிகள்(mongoose),புள்ளிமான்கள்,அனுமன் மந்திகள்,மிளாமான்கள்,செந்நாய்கள்,கரடிகள்,மலை அணில்.கரடிகள் தான் மிக்க துன்பப்பட்ட விலங்குகள் மனிதனால்.மூக்கில் கயிறு போட்டு தெருவின் சாலைகளில் நடனமாட வைத்து வேடிக்கை காட்டினர்.
புலிகளைப்பற்றி பல அரிய தகவல்களும் தருகிறார்.புலி தனித்து வாழும் மிருகம்.தனக்கு உணவு கிடைப்பதை வைத்து தன் எல்லையை அதற்கு ஏற்றவாறு வைத்து கொள்கிறது.புலியினால்,புலிகளின் உணவைச்சார்ந்த விலங்கு இனங்களும் பிழைக்குறது!இங்குபுலிகளை வேட்டையாட அந்த உணவுச்சங்கிலிஅ று படுகிறது.காடுகளின் தரம் குறைகிறது.காடுகள் சுருங்க,மழை குறைகிறது.நீர்வரத்து குறைகிறது!உலகம் அழிவை நோக்கி வேகமாக நடை பயிலத்தொடங்குகிறது.
ஐ.டி துறையில் சிறந்து விளங்கும் பெங்களூர்,கான்கிரீட் காடுகள் நிறைந்தபெங்களூர் எப்படி பறவைகளால் சூழப்பட்டு இருந்தது முன்பு என நினைவு கூறுகிறார்.
.எங்கும் மரங்கள்,மரங்களில் அனைத்து வகை பறவைகள்!பிரம்மகிரி சரணாலயம்,நாகர் ஹோலேவனப்பகுதி பல அரிய வகை பறவகளாலும்,வலசைப்பறவைகளாலும் ,கேளை மான்கள்,புலிகள்,செந்நாய்கள்,மிளா மான்கள் என பலவகை விலங்குகள்.இக்காடுகளை அரசு பேசிப் பாதுகாக்க வேண்டும்
மற்றும் ஓரு சுவாரசியமான செய்தி!சுவிட்சர்லாந்தின் பறவைகளையும் காணச்செல்கிறார் ஆசிரியர்.அங்கு
நாராய் நாராய் செங்கால் நாராய.
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
என நம் புலவர் பாடிய நாரை பறவைகளைப் பார்த்து மகிழ்வடைந்தார்.இந்த இனம் அழிவத உணர்ந்து அரசாங்கத்தால்காப்பாற்றப்பட்டு வருகிறது.இந்த நாரைகள் வலசைப்பறவைகள்.கோடையில் இங்கேயும் குளிர் காலத்தில் வெப்ப நாடுகளுக்கு புலம் பெயர்ந்து விடுகிறது.இங்கு குளங்கள்,நீரோடைகள் மிகவும் சுத்தமாக உள்ளன.குப்பைகள் மறு சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்படுகிறது!
புலிகள்,மற்ற விலங்குகள் வேட்டையாடப்படுதல் தவிர்க்க வேண்டும்.வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல.கீதமிசைத்து விண்ணில் பறக்கும் பறவைகள்,துள்ளி ஓடும் விலங்குகள்,கம்பீர நடை பயிலும் காட்டு விலங்குகள்,யானைகள் அனைவருக்கும் இந்த பூமி சொந்தம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்
என சொந்தம் கொண்டாடினார் பாரதியார்.அந்த சொந்தங்கள் நம்முடன்,நம்மோடு , இங்குவாழ அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளன.மனிதன் இன்றி அவைகள் சந்தோசமாக,தனித்து வாழும்.ஆனால் மனிதனோ parasite who can not live alone,
என்பதை நாம் உணரவேண்டும்.
யாருக்கானது இந்த பூமி என்ற கேள்விக்கு,இந்த பூமி அனைவருக்கும் என்ற பதிலை நம் மனதில் எழ வைத்துள்ளார் ஆசிரியர்!
இசைப்பாட்டு பாடி மகிழும் குயில்களின் கீதம்,காகங்களின் கரைதல்,குருவிகளின் ஓசை,காடுகளின் ஆழ்ந்த மௌனம்,சல,சலத்து ஓடும் சிற்றோடைகள்,புலம் பெயர்ந்து வரும் பறவைகளின் அற்புதம்,பூச்சிகளின் இடைவிடாத ஒலி,கம்பீரமான ,காட்டின், விலங்குகள்,துள்ளி ஓடும் மான்கள் இவைகள் எல்லாம் இந்த பூமியில் நம்முடன் வாழ் ஆண்டவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள்! இதை உணர்ந்து அன்புடன் வாழ்வோம்!அனைவரையும் வாழவைப்போம்!இயற்கையின் இயல்பான தொடர்ச்சியை காப்போம்!
இந்த நூல் 2014-15ம் ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் விருது பெற்ற நூல்