Aug 18, 2021

யாருக்கானது பூமி? - விமர்சனம் - 2

நன்றி சந்திர கலாவதி...!!!

----‐--------------------------------------------

யாருக்கானது பூமி?
சூழலியல் கானுயிர்க்காப்பு பறவையியல் கட்டுரைகள் .
பா.சதீஷ் முத்து கோபால்
அண்டங்கள் வெடித்து சிதறிய ஒரு துளி நம் பூமி!ஒரு செல் ஜீவராசியிலிருந்து,மனிதர்கள் வரை பரிணாம வளர்ச்சி!கூடவே காடுகள்,மலைகள்,மரங்கள்,கடல்,நதி !மனிதன் விலங்குகளுடனும்,பறவைகளுடனும் இணைந்து வாழ்ந்தான்!நாடோடியாக அலைந்து திரிந்த வாழ்க்கை!மனிதன் என்று நிலையாக வாழ்தல் தொடங்கினானோ,தனக்கென வாழ்விடம் அமைக்க புறப்பட்டானோ,அப்போது ஆரம்பமானது பறவைகள்,விலங்குகளின் வாழ்விட அழிப்பு,ஆக்கிரமிப்பு.எழுந்தது கேள்வி யாருக்கானதுஇந்த பூமி?
பறவைகளின் குரல் குறைந்து ஒலிக்கும் இக்கால சூழ்நிலையில் பறவைகளைப் தேடி செல்லும் ஆசிரியர்!அதன் வாழ்விடங்களுக்கு செல்பவர்!அவைகளை கணக்கெடுப்பவர்!அழியும் நிலையில் உள்ள இனங்களின் மேல் அக்கறை செலுத்துபவர்! பல பறவைகளின் சரணாலயங்கள் சென்று,பறவைகளின் வகைகள்,உள்ளூர் பறவைகள்,வலசைப்பறவைகள் என இனம் காட்டுபவர்!அதன் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி எளிமையாக்கியவர்! காடுகள்,ஓடைகள்,மரங்கள் பறவைகளின் வாழ்வுக்கு ஆதாரநிலை என விளக்குபவர்!இவரின் கட்டுரைகள் தமிழக அரசின் பரிசை வென்று உள்ளது!
ஆசிரியர் பறவைகள் இயற்கையை இணைக்கும் ஒரு முக்கியசங்கிலி எனவும்,பறவைகள் எவ்வாறு தாவரங்கள் பெருகி வளர உதவுகின்றன,வேண்டாத ,பூச்சிகளை தின்று,சூழலை பாதுகாக்கிறதுஎனவும் பறவைகளின் முக்கியத்தை மக்கள் உணர இல்லை என வருத்தத்துடன் கூறுகிறார்.சுற்று சூழல் மக்களால் எப்படி மாசு படுகிறது,நெகிழியை அதிகம் பயன்படுத்தி குப்பைகளில் வீசி,சுற்று சூழலை மாசுபடுத்துகின்றனர்,காடுகளை அழித்தல்,மரங்களை வெட்டுதல்,நீர்நிலைகளை மாசுபடுத்துதல்,ஒலிபெருக்கிகள் சத்தமாக வைத்து அதிர்வுகளை ஏற்படுத்துதல் இவை அனைத்தும் பறவைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது என்பதை எடுத்து காட்டுகிறார்.
மலையில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக,காட்டு தீயைப்பற்றி எடுத்து சொல்லி காடுகளை பாதுகாக்க ஆசிரியர் முயற்சி எடுக்கிறார் .காடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் புகை பிடித்தும் அணைக்காமல் போடுவது முக்கிய காரணம் என கூறுகிறார்.பல சரணாலயங்களுக்கு சென்று ,அங்கு காணப்படும் அரிய பறவைகள்,அங்கு வரும் வெளிநாட்டு வலசை பறவைகள்,ஆகியவற்றை வரிசைப்படுத்துகிறார்!
பழனி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது வேலுடன் குடியிருக்கும் முருகப்பெருமான்.ஆனால் இந்த நூலைப்படித்தவுடன்,தொடர்ந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்,அவற்றில் வளர்ந்துள்ள மரங்கள்,ஆங்காங்கே துள்ளி ஓடும் மான்கள்,பறவைகள்,அவற்றின் கீதங்கள்!
பழனியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கூர் குளத்திற்கு குளிர்காலத்தில் ஏராளமான பறவைகள் வருகிறது.
கௌதாரி(Grey francolin),பவளக்கால் உள்ளான்கள், மேக்கூட்டம் போல காணப்படும் சோளக்குருவிகள்(rosy starling),செவ்வரி நாரை,அரிவாள் மூக்கன்,போன்ற பறவைகளைப் ஆங்கு காணமுடியும்.
நாம் கருவேலமரங்களின் தீமையை உணர்ந்துஅவற்றை அழிக்க முயலும் போது ,பறவைகளுக்கு உகந்த மரம் நீர்க்கருவை மரம் .இந்த வேறுபாட்டை மக்கள் உணர வேண்டும் என கூறுகிறார்.இவை குளங்களின் காணப்படும்.பறவைகள் வரவும்,அமரவுமிந்த மரங்களின் அவசியத்தை சுட்டி காட்டுகிறார்!
பனை மரங்களில் ஆந்தைகள் வாழும்.அவை எலிகளை தின்று,விவசாயிகளுக்கு உதவும் என கூறி பனை மரங்களின் அவசியத்தை விளக்குகிறார்.குளங்களை மாசுபடுத்தக் கூடாது.பறவைகளை துன்புறுத்தல் கூடாது .இதை பாட புத்தகங்கள் மூலமும்,அரசாங்க அறிவிப்புகள் மூலமும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்.
பழனி அருகேஉள்ள கோதைமங்கலத்தில் உள்ள இரண்டு குளங்கள் பறவைகளின் சிறந்த வாழிடங்கள்!இந்த குளங்கள்,வறட்சி,குப்பை கூளங்கள்நெகிழிப்பொருட்கள்,இவற்றால் மாசுப்பட்டு அழியும் தறுவாயில் உள்ளதுஅருகில் ஓடும் சண்முக நதியின் நிலையும் இதுவே!அரசாங்கம் கவனம் கொண்டு சீர்படுத்த வேண்டும்.இங்கு ஏராளமான பறவைகள் வருகை தருகின்றன!
பெரிய ஆவுடையார் கோவில் போகும் வழியில் இந்த குளம் உள்ளது.இங்கு சாலையின் குறுக்கே ஓடும் கானாங்கோழிகள்(white breasted water hen)சுறு சுறுப்பாக அலைந்து திரியும் பஞ்சுருட்டான்(green bee eater)நாரைகள்(pond herons),கொக்குகள்(Egrets),அரிவாள் மூக்கன் பறவைகள்,கத்தியபடி வட்டமிடும் ஆள் காட்டி குருவிகள்,பூச்சிகளைப் பிடித்து கொண்டு இருக்கும் கரிச்சான் குருவிகள்(Black Drongo),உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும்,புள்ளி மூக்கு வாத்துகள்(spot filled duck),கிளைகளில் ஏறி அமர்ந்து இருக்கும் செந்நாரைகள்,(purple herons)குளத்தின் நடுவே உள்ள மணல் திட்டுகளில் அமர்ந்து இருக்கும் செங்கிழுவைகள்(lesser whistling ducks),நீருக்குள் ஓடி மறையும் முக்குளிப்பான்கள்(Little Gerbe),கூட்டமாக பறந்து திரியும் நீர்க்காகங்கள்,நாமக் கோழிகள்,நீலத்தாழைக்கோழிகள்,மிகப் பெரிய மீன் கொத்தி பறவைகள்,என பறவைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவித்ம் எனக் காணப்படும்!இந்த அழகிய அரிய பறவைகள் எப்போதும் வரவேண்டும் அருகிவிடக்கூடாது !இது அரசாங்கத்தின் கையிலும் நம் கையிலும் தான் உள்ளது!
குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்.காட்டு ஆமணக்கு என்ற புதர் செடிகள் குளங்களின் காணப்படுகிறது.இவை நீக்கப்பட வேண்டும்.பரவிக்கிடக்கும் ஆகாசத் தாமரை செடிகள் நீக்கப்பட வேண்டும்
காவேரி உருவாக்கி வைத்துள்ள அற்புதத்தீவான ஶ்ரீரங்கப்பட்டிணத்தின் வடமேற்கே அமைந்துள்ள ரங்கணத்திட்டு பறவைகள் சரணாலயம்,அழகிய, அரிய பறவைகள்,வலசை பறவைகள் வருமிடம்!
அரிவாள் மூக்கன் பறவைகள்,நத்தை குத்தி நாரைகள்,கரண்டி வாயன் இந்த மூன்றும் நீர் புலப்பறவைகள்.வித்தியாசமான அலகுகளைக் கொண்டது!
வக்கா பறவைகள்(Black crowned night heron)ஆற்று ஆலாக்கள்,அரச வாலன் என பல பறவைகள்! நாம் கேள்விப்படாதவை!ஆசிரியர் வருங்கால தலை முறைக்கு ஒரு ஆவணமே,வைத்துள்ளார்!
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ,பறவைகள் ,விலங்குகள் பற்றியும்,காடுகள் எவ்வளவு அவசியம்,குறிப்பிட்ட இடங்களில் சாலைகளை அமைத்து அமைதியை குலைக்க கூடாது அது பறவைகளையும்,விலங்குகளையும் எப்படி பாதிக்கிறது
என்பதையும் அழகாக கூறுகிறார்.அத்தி மரத்தின் பொந்துகளில் முட்டைகளை வைத்து ,தாய் பறவை உள்ளே சென்றவுடன்,ஆண் பறவை மண் வைத்து பூசி ஒரு சிறியதுளையுடன் பாதுகாக்கிறது என்ற அற்புதத்தை விளக்குகிறார்.
காடுகளை துண்டாடுவது எப்படி விலங்குகளை பாதிக்கிறது,ஒரே இனத்துக்குள் இனப்பெருக்கம் ஏற்படுவதால் விலங்குகள் எண்ணிக்கையிலும் வலிமையிலும் குறைந்து காணப்படுவது,விலங்குகள் நடமாடும் பகுதிகளில் சாலைகளை அமைப்பது அவைகளுக்கு எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது எனவும்,குறிப்பிட்ட மரங்களின் அழிவு எப்படி பறவைகள் இனங்களைப் பாதிக்கிறது,நெகிழிப்பொருட்கள் எப்படி சுற்று சூழலை மாசுப்படுத்தி, பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன என்பதையும் விளக்குகிறார்.
நாகர்ஹோலே வனப்பகுதி.இதன் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கே.எம்.சின்னப்பா!இப்போது ஒரு சிறந்த புலிகளின் சரணாலயமாக விளங்குகிறது!இங்கு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிக்காக ஆசிரியர் சென்றார்.அங்கு காணப்படும் விலங்குகளை அட்டவணைப்படுத்துகிறார்.
கீரிகள்(mongoose),புள்ளிமான்கள்,அனுமன் மந்திகள்,மிளாமான்கள்,செந்நாய்கள்,கரடிகள்,மலை அணில்.கரடிகள் தான் மிக்க துன்பப்பட்ட விலங்குகள் மனிதனால்.மூக்கில் கயிறு போட்டு தெருவின் சாலைகளில் நடனமாட வைத்து வேடிக்கை காட்டினர்.
புலிகளைப்பற்றி பல அரிய தகவல்களும் தருகிறார்.புலி தனித்து வாழும் மிருகம்.தனக்கு உணவு கிடைப்பதை வைத்து தன் எல்லையை அதற்கு ஏற்றவாறு வைத்து கொள்கிறது.புலியினால்,புலிகளின் உணவைச்சார்ந்த விலங்கு இனங்களும் பிழைக்குறது!இங்குபுலிகளை வேட்டையாட அந்த உணவுச்சங்கிலிஅ று படுகிறது.காடுகளின் தரம் குறைகிறது.காடுகள் சுருங்க,மழை குறைகிறது.நீர்வரத்து குறைகிறது!உலகம் அழிவை நோக்கி வேகமாக நடை பயிலத்தொடங்குகிறது.
ஐ.டி துறையில் சிறந்து விளங்கும் பெங்களூர்,கான்கிரீட் காடுகள் நிறைந்தபெங்களூர் எப்படி பறவைகளால் சூழப்பட்டு இருந்தது முன்பு என நினைவு கூறுகிறார்.
.எங்கும் மரங்கள்,மரங்களில் அனைத்து வகை பறவைகள்!பிரம்மகிரி சரணாலயம்,நாகர் ஹோலேவனப்பகுதி பல அரிய வகை பறவகளாலும்,வலசைப்பறவைகளாலும் ,கேளை மான்கள்,புலிகள்,செந்நாய்கள்,மிளா மான்கள் என பலவகை விலங்குகள்.இக்காடுகளை அரசு பேசிப் பாதுகாக்க வேண்டும்
மற்றும் ஓரு சுவாரசியமான செய்தி!சுவிட்சர்லாந்தின் பறவைகளையும் காணச்செல்கிறார் ஆசிரியர்.அங்கு
நாராய் நாராய் செங்கால் நாராய.
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
என நம் புலவர் பாடிய நாரை பறவைகளைப் பார்த்து மகிழ்வடைந்தார்.இந்த இனம் அழிவத உணர்ந்து அரசாங்கத்தால்காப்பாற்றப்பட்டு வருகிறது.இந்த நாரைகள் வலசைப்பறவைகள்.கோடையில் இங்கேயும் குளிர் காலத்தில் வெப்ப நாடுகளுக்கு புலம் பெயர்ந்து விடுகிறது.இங்கு குளங்கள்,நீரோடைகள் மிகவும் சுத்தமாக உள்ளன.குப்பைகள் மறு சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்படுகிறது!
புலிகள்,மற்ற விலங்குகள் வேட்டையாடப்படுதல் தவிர்க்க வேண்டும்.வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல.கீதமிசைத்து விண்ணில் பறக்கும் பறவைகள்,துள்ளி ஓடும் விலங்குகள்,கம்பீர நடை பயிலும் காட்டு விலங்குகள்,யானைகள் அனைவருக்கும் இந்த பூமி சொந்தம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்
என சொந்தம் கொண்டாடினார் பாரதியார்.அந்த சொந்தங்கள் நம்முடன்,நம்மோடு , இங்குவாழ அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளன.மனிதன் இன்றி அவைகள் சந்தோசமாக,தனித்து வாழும்.ஆனால் மனிதனோ parasite who can not live alone,
என்பதை நாம் உணரவேண்டும்.
யாருக்கானது இந்த பூமி என்ற கேள்விக்கு,இந்த பூமி அனைவருக்கும் என்ற பதிலை நம் மனதில் எழ வைத்துள்ளார் ஆசிரியர்!
இசைப்பாட்டு பாடி மகிழும் குயில்களின் கீதம்,காகங்களின் கரைதல்,குருவிகளின் ஓசை,காடுகளின் ஆழ்ந்த மௌனம்,சல,சலத்து ஓடும் சிற்றோடைகள்,புலம் பெயர்ந்து வரும் பறவைகளின் அற்புதம்,பூச்சிகளின் இடைவிடாத ஒலி,கம்பீரமான ,காட்டின், விலங்குகள்,துள்ளி ஓடும் மான்கள் இவைகள் எல்லாம் இந்த பூமியில் நம்முடன் வாழ் ஆண்டவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள்! இதை உணர்ந்து அன்புடன் வாழ்வோம்!அனைவரையும் வாழவைப்போம்!இயற்கையின் இயல்பான தொடர்ச்சியை காப்போம்!
இந்த நூல் 2014-15ம் ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் விருது பெற்ற நூல்

No comments:

Post a Comment