வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் வரவேற்புக்குரியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வியான வரையாடுகளின் மிகவும் குறைந்துவிட்டது. இது தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இருக்கிறது. மேற்குத்  தொடர்ச்சி மலையில் உருவான சுற்றுலாத் தளங்கள், வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட்டது, வேட்டை உள்ளிட்ட பல காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து இதன் வாழிடமும் சுருங்கிவிட்டது. 


ஆங்கிலேயர்களால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அயல் தாவரங்கள் இவற்றின் வாழிடத்தை சூறையாடின. தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டத்தில் வரவேற்கத் தகுந்த சில அம்சங்கள் உள்ளன. ஆனால் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதில் சில கேள்விகள் எழுகின்றன.

பழைய வாழிடங்களில் மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்வது :

அவற்றின் வாழிடங்களில் அயல் தாவரங்கள் இருந்தால் எப்படி மீண்டும் அறிமுகம் செய்வது ? சுற்றுலாத் தளமாக மாறிய இடங்களில் அவற்றை அறிமுகம் செய்ய முடியுமா? பாவப்படும் புதிய சாலைகள் அவற்றின் வாழிடத்தை பாதிக்கிறதே.

சோலைப் புல்வெளிகளை சீரமைப்பது:

தைலம், சீகை, பைன் உள்ளிட்ட அயல் மரங்களை எப்படி அப்புறப்படுத்துவது? அதற்கான திட்டங்கள் என்ன? அந்த இடங்களில் சோலைப்புல்வெளிகளை எப்படி உறுதி செய்வது? புதிதாக உருவாகும் சுற்றுலாத் தலங்களை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது?

வரையாடுகளை பாதுகாப்பதால் என்ன நன்மை?

வரையாடுகளை பாதுகாக்க வேண்டுமானால், சோலைக்காடுகளையும், சோலைப்புல்வெளிகளையும் பாதுகாத்தாக வேண்டும்.

அவ்வாறு பாதுகாக்கப்படும் காடுகள், அங்கே உள்ள புல்வெளிகளில் வருடம் முழுவதும் பெய்யும் மழையை ஒரு பஞ்சை போல தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்கிறது. இது மெல்ல மெல்ல நீரை வெளியிடுவதால் ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். 

இது சமவெளிப்பகுதியில் மனிதர்களுக்குத் தேவையான குடிநீரையும், வேளாண்மைக்குத் தேவையான நீரையும் பூர்த்தி செய்கிறது.