Nov 28, 2022

இருவாச்சி காவியம்

பறவைகளைப் பார்க்கத் தொடங்கிய பிறகு இருவாச்சியை பார்க்க வேண்டும் என்பது நெடு நாள் ஆசையாக இருந்தது. பொதுவாக தமிழ் நாட்டில் காணப்படும்  நான்கு வகை இருவாச்சிகளில் எழிலார்ந்த இருவாட்சி "பெரிய இருவாட்சி" (Great Hornbill) தான். எங்கேயாவது ஒரு காட்டில் பார்த்துவிட மாட்டோமா என்ற தேடல் இருந்துகொண்டே இருந்தது. ஒருமுறை என்னுடைய நண்பர் வால்பாறையில் அந்த பறவை இருக்கும் இடத்தை கூறினார். அவர் சொன்ன அந்த குறிப்பிட்ட மரத்தில் அதை நிச்சயம் பார்க்கலாம் எனத் தெரிந்துகொண்ட போது ஆர்வம் அதிகமானது. பழனியில் இருந்து இருவாச்சியைக் காண வால்பாறை கிளம்பினேன். 



கிட்டத்தட்ட 100 கி.மீ தூரப் பயணத்தில் இருவாச்சி பற்றிய எண்ணமே மேலோங்கி இருந்தது. சரியான அடையாளங்களை குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அதன்படி அவர் சொன்ன அந்த மரத்தை அடையாளம் கண்டுகொண்டேன். அந்த மரத்தில் இருந்து ஒரு 100மீ தூரம் தள்ளி நின்று, அந்த மரத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். வேறு எந்த பறவைகளின் மீதும் என் எண்ணம் திரும்பவில்லை. எப்படியும் இருவாச்சியை பார்த்துவிட வேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் என்னால் அவற்றை பார்க்க முடியவில்லை.

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது எனக்கு நேர் எதிரில் தரையில் ஏதோ இருப்பதை அறிந்து உற்று நோக்கினேன். அது கேளையாடு. இவ்வளவு நேரமாக நான் அங்கேயே இருந்தும் அந்த மானை கவனிக்கவே இல்லை. அது எப்போது வந்தது? நான் வரும் போது அங்கே தான் இருந்ததா? என கேள்விகள் மேலெழும்பின. ஆனால் அந்த மான் என்னை கவனித்துக் கொண்டுதான் இருந்திருக்கும். ஒருவேளை இருவாச்சியும் அப்படித்தான் எங்கேயாவது இருக்கிறதா? என்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறதா? என்னால் தான் பார்க்க முடியவில்லையா என கேள்விகள் என்னை துரத்தின. இன்னும் தீவிரமாகத் தேடினேன். முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருந்தேன்.

மரப்பொந்துகளில் கூடமைக்கும் இருவாச்சி அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை பெண் பறவை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும். பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை முறைதான் இந்தப் பறவையினத்தை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இருவாச்சியின் எச்சங்களால் காடு வளர்கிறது. இருவாச்சி விதைப் பரவல் செய்வதில் முக்கிய பறவையாக விளங்குகிறது. 

நான் இருவாச்சியை தேடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில் சோர்வே மிஞ்சியது. இன்றைய தினம் அதை பார்க்க முடியாதோ என்ற எண்ணம் மேலோங்கியபோது, நான் பார்த்துக் கொண்டிருந்த மரத்தின் கிளையில் அழகாக வந்தமர்ந்து இருவாச்சி. தான் கொண்டு வந்திருந்த உணவை பொந்தில் இருந்த பறவைக்கு ஊட்டியது. பொதுவாகவே கூடுகளை படம் எடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியோடு இருப்பேன். ஏனென்றால் பறவையின் கூடுகளை படம் எடுக்கும் போது அதில் இருக்கும் குஞ்சுகளோ, அதன் பெற்றோர்களோ அச்சப்பட வாய்ப்புண்டு. மேலும் கூடுகளை படம் எடுப்பவர்களை இது ஊக்குவிக்கும். படம் எடுப்பவர்களால் கூடு களையவும் வாய்ப்புண்டு.

ஆனால் நான் பார்த்துக் கொண்டிருந்த பறவையோ இருவாச்சி. இனி இவற்றை எப்போது காண்பேன் எனத் தெரியாது. என் கண் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தது. ஒரே ஒரு படம் மட்டும் எடுக்கலாமா என்ற சிந்தனை ஒரு பக்கம் உதித்தாலும், கூடுகளை படம் எடுக்க வேண்டாம் என்ற என் உறுதியில் இருந்து பின்வாங்க முடியவில்லை. நான் என் கேமிராவை உள்ள வைத்துவிட்டு அதை பார்த்துக் கொண்டே இருந்தேன். இருள் கவியத் தொடங்கியதும் அங்கிருந்து கிளம்பினேன். இமயத்தில் இருந்து வலசை வந்த சாம்பல் வாலாட்டிக் குருவி சாலையில் வந்து அமர்ந்தது.

21 comments:

  1. Excellent write up !! What an experience and a ethical way to observe a bird ❤️👏🏼 This passage also explain about the hornbill’s nesting period and how it is very essential bird to the forest and it’s growth.

    ReplyDelete
  2. Excellent write up!! More informative and inspiring.. keep writing. It’s always worth it to read 😊

    ReplyDelete
  3. I am yet to see. Change your body soon , you can shoot in silent shutter.

    ReplyDelete
    Replies
    1. It's not about shutter speed. I don't want to encourage nesting photography. Moreover I don't want to reveal others what I'm looking for at that particular location.

      Delete
  4. Good work Mr.Sathish Muthu Gopal. I really appreciate your hardwork and interest on this topic/area. Keep doing it, we ill support you ever. Best wishes.

    ReplyDelete
  5. More informative and inspiring

    ReplyDelete
  6. Excellent read as always, Satheesh. Continue starting your experience.

    ReplyDelete
  7. Wonderful narration.

    ReplyDelete
  8. Nice Anna..That would be a great experience..👍👌

    ReplyDelete
  9. Nice Anna..Enjoyed reading your content. Keep doing your best work Anna..👌👍

    ReplyDelete
  10. வாலாட்டி குருவி! ( spell correction over)

    ReplyDelete