நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிவிங்கப்புலிகள் (African Cheetah) வரவிருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் சிறுத்தைகள் (Leopard) வர இருப்பதாக செய்தி வெளியிடுகின்றன. இந்தியாவில் சிறுத்தைகள் இப்போதும் காடுகளில் வாழ்கின்றன. ஆனால் சிவிங்கப்புலிகள் 1948ஆம் ஆண்டு இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோனது. இந்தியாவில் வாழ்ந்தவை ஆசிய சிவிங்கப்புலிகள் (Asian Cheetah). வேட்டையின் காரணமாக அவை முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட்டன. இப்போதும் ஆசிய சிவங்கப்புலிகள் ஈரானில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றன. 



தற்போது கொண்டுவரப்படும் ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள் மத்திய பிரதேச காடுகளில் விடப்படும். அவை இதுவரை சந்திக்காத நில அமைப்பையும் இரை விலங்குகளையும் சந்திக்கும். எனவே இதில் இருக்கும் சாதக பாதகங்கள் இப்போது தெரியாது. இருப்பினும் ஆசிய சிவங்கப்புலிகளை காப்பாற்ற முனைத்திருந்தால் இந்த கேள்விகள் வராது. ஆசிய சிவங்கப்புலிகளை காப்பாற்றவும் இந்த நிலப்பரப்பு பயனுள்ளதாக இருந்திருக்கும். 



ஆசிய சிவிங்கப்புலிகள் தமிழ்நாட்டிலும் வாழ்ந்து வந்தன. 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நிலப்பரப்பில் இந்த உலகின் வேகமாக ஓடும் சிவிங்கப்புலிகள் இனி வாழப்போகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் (Asian Lion) தற்போது குஜராத் மாநிலத்தில் மட்டும் வாழ்ந்து வருகிறது. அவற்றில் சிலவற்றை வேறு மாநிலங்களுக்கு இடம் மாற்ற தற்போது வரை குஜராத் அரசு மறுக்கிறது. ஆசிய சிங்கங்களும் அவை ஏற்கனவே வாழ்ந்த நிலப்பரப்பில் தனியாக பிரித்து பாதுகாக்கப்படுவது அவசியம். ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் ஆசிய சிங்கங்களை அழியாமல் காப்பாற்ற முடியும்.

Asiatic Cheetah Specimen in Zürich Zoological Museum