Sep 10, 2022

யானைகளுக்கு ஏன் மதம் பிடிக்கிறது ?

திரு.கோவை சதாசிவம் அவர்கள் எழுதிய "ஆதியில் யானைகள் இருந்தன" என்ற நூலை வாசித்தேன். நூலின் தலைப்பு யானைகளை காக்க வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்துகிறது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள யானைகள் பற்றிய பல குறிப்புகளை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. அதே நேரம் சங்க இலக்கியங்களில் யானைகள் பற்றிய உண்மைக்கு முரணாக சொல்லப்பட்ட கருத்துகளையும் வெளிப்படையாக பேசுகிறது. யானைகள் மீது மனிதர்கள் இதுவரை செய்த வன்முறைகள் யாவும் கொடூரமானவை. போரில் பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட யானைகள், வேட்டைக்காக கொல்லப்பட்ட யானைகள் என நீளும் யானைகளுக்கு எதிராக மனிதர்கள் செய்யும் அட்டூழியம் இன்று வரை தொடர்கிறது. 


யானைகளுக்கு ஏன் மதம் பிடிக்கிறது என்பதை மிக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். தங்கள் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட வயதுவந்த  ஆண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் தன்னுடைய கண்ணுக்கும் காதுக்கும் நடுவே இருந்து சுரக்கும் மதநீரின் வாசனை மூலமாக பெண் யானைகளுக்கு செய்தி சொல்கிறது. அந்த நேரங்களில் சில ஆண் யானைகள் மிகவும் ஆவேசமாக இருக்கும். இது இயற்கையாக நிகழ்வது. இந்த இயற்கையான நிகழ்வை சங்கிலிகளால் மனிதர்கள் கட்டுப்படுத்த நினைக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யானைக்கு மதம் பிடித்துவிட்டதாக யானைகளின் மீதே பழிபோடுகிறோம். 

இந்த நூலில் யானைகள் பற்றிய இரண்டு சம்பவங்கள் என் மனதை மிகவும் கவர்ந்தன. ஒன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இன்னொன்று ஒரு காடருகே நடந்தது. இந்த இரண்டாவது சம்பவத்தில், யானை ஒன்று ஒரு வீட்டை இடித்துத் தள்ளுகிறது. எல்லோரும் கூச்சலிட யானை இடிப்பதை நிறுத்தவில்லை. தீடிரென ஒரு குழந்தையின் அழு குரலை கேட்ட யானை இடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தையைத் தேடியிருக்கிறது. குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை எனத் தெரிந்ததும் குழந்தையை ஆறுதல்படுத்த முயன்றிருக்கிறது. தும்பிக்கையை ஆட்டிக்காட்டி பிளிறியிருக்கிறது. அந்த குழந்தை நலமாக இருப்பதை அரித்த கொண்ட பின் அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறது. யானைகளுக்கு மற்ற உயிர்களிடத்திலும் அன்பு உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் யானை வருவதை அறியாமல் ஒரு நபர் நின்றுகொண்டிருப்பர். யானை அவரது மிக அருகில் வந்தும் ஒன்றும் செய்யாமல் கடந்துபோவது தெளிவாகத் தெரிந்தது. 

யானைகளை பற்றிய அறிவியல் தகவல்களை அறிந்து கொள்ளவும், சங்க இலக்கிய மேற்கோள்களை தெரிந்து கொள்ளவும் இந்த நூலை அவசியம் வாசிக்கலாம். அந்த திருவனந்தபுர சம்பவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நூலை அவசியம் வாங்கவும். Crownest இணையதளத்தில் கிடைக்கிறது.

https://crownest.in/product/adhiyil-yanaikal-irunthana-kovaisadhasivam/

புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை

நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?


8 comments: