ஒரு வருடத்திற்கும் முன்பே நான் வாசித்த நூல் "உழவுக்கும் உண்டு வரலாறு". திரு. கோ.நம்மாழ்வார் எழுதிய இந்த புத்தகம் ஏற்படுத்திய வலி ஒரு  ஆராத்துயரமாக நீடிக்கிறது. வேளாண்மை என்றாலே என்னவென்று தெரியாமல் இருக்கும் இன்றைய நகரத்து குழந்தைகள், இயற்கை வேளாண்மை பற்றி எப்படி தெரிந்து கொள்வார்கள் என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.

நம் சமூகத்தில் பெரும்பாலும் விவசாயிகளின் குறைகளையோ வேளாண்மையில் நடக்கும் தவறுகளையோ குறித்து அதிகம் பேசுவதில்லை. வேளாண்மை தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று பொதுவான வார்த்தைகளை பேசிவிட்டு விலகி நின்று கொள்கிறோம். இதன் விளைவு, அடுத்த தலைமுறை பற்றி கூட கவலைப்படாத வேளாண்மை இன்று இந்த தேசம் எங்கும் நடக்கிறது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பான எந்த சிறப்பான முயற்சிகளையும் மத்திய மாநில அரசுகள் எடுப்பது போலவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் திரு.நம்மாழ்வார் போன்ற இயற்கை மகத்துவம் தெரிந்த மாந்தர்கள் போராடுவது ஆறுதலான விஷயம் தான். ஆனால் இன்றும் இந்த மனிதர்கள் போராடிக் கொண்டிருக்க, நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது தான் இதில் கொடூரமானது.

இவர்கள் நமக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதே பலரும் புரிந்து கொள்ளாத சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தை இன்றைய விவசாயிகள் படிப்பதை விடவும் இன்றைய நகரத்து இளைஞர்கள் படிக்க வேண்டியதே அவசியம் என நினைக்கிறேன். வேளாண்மை செய்ய முடியாதவர்கள், குறைந்தது இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கவாவது முன் வரவேண்டும்.

திரு. கோ.நம்மாழ்வார் அவர்களுடைய உரையையும் கேட்டுப்பாருங்கள்.