Nov 19, 2022

ஆண் எனும் அற்புதம்

இருவாட்சி என்றொரு பறவை உண்டு. மரப்பொந்துகளில் கூடமைக்கும் இப்பறவை அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும் தாய்மையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது ? ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் பணி செய்துகொண்டிருக்கும் ஆண் பறவையின் அற்புதங்களை எப்படி பேசாமல் விடுவது ?  பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பறவை தானே... சிறகை விரித்து உல்லாசமாக வானில் பறக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அதன் துயரங்கள் புரியாது. மனிதர்களிடமிருந்தும் தப்பித்து இத்தனை விஷயங்களையும் அந்த ஒரு ஆண் பறவை செய்ய வேண்டியிருக்கிறது. 


இப்படித்தானே இந்த உலகத்தில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களும் பரிணமித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன, மனிதர்கள் உள்பட. இந்த உலகில் எல்லா உயிரினங்களும் நிலைத்து வாழ ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. இத்தனை அர்ப்பணிப்புடன் வாழும் ஆண், பெண்களைப் போல போற்றப்படுவது இல்லை. சமூக குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களின் பெயரே பிரதிபலிப்பதால் ஒட்டுமொத்த ஆண்களும் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டியது இல்லை. ஆனால் ஆண்களின் மீது அப்படி ஒரு சாயம் பூசப்படுவதும் அநீதி இல்லையா ? ஆண்களின் உணர்வுகளும், கனவுகளும் ஆசைகளும் உலகம் முழுக்கவே பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் சமூக அரசியல் மாற்றங்களுக்கான முன்னெடுப்புகளை செய்வதில் பெரும்பாலும் ஆண்களே முன்னிற்கிறார்கள்.

 இருவாட்சியின் குஞ்சுகளுக்கு தாயின் கனிவு தான் தெரியும். தந்தையின் அர்ப்பணிப்பு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் ஆண் குஞ்சுகள் பெரிதானதும், தன் தந்தையைப் போலவே சுற்றிக் கொண்டிருக்கும். இது இயற்கையின் நியதி. ஆண்களின் தியாகங்கள் பேசாப் பொருளாகவே இருப்பதற்கு ஆண்களும் காரணம் தான். பரிணாம வளர்ச்சியில் எல்லா திறமைகளையும் பெற்றுக் கொண்ட ஆண், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ளவேயில்லை. தன்னுடைய கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தப்படும் ஆண் யானைகளைப் போல, ஆயிரக்கணக்கான பசுந்தாள்களைக் கொண்டு கூடமைத்த பிறகும், நிராகரிக்கப்படும் ஆண் தூக்கணாங்குருவியைப் போல எத்தனையோ வலிகளோடு வாழும் ஆண்கள் அத்தனை பேரும் இந்தப் புவியில் உயிர்கள் தழைத்திருக்க காரணமாக இருக்கும் அற்புதங்கள் இல்லையா ?


25 comments:

  1. உண்மை சதிஷ்...அழகிய மொழி நடை

    ReplyDelete
  2. ஆணும் பெண்ணும் சேர்ந்து செயல்படும்போதுதான் அடுத்தகட்டத்திற்கு எதுவும் நகரும். ஆணை விட பெண் மனம் பாராட்டையும் அங்கீகரிப்பையும் எதிர்பார்க்கிறது. அவை கிடைக்காமல் போகும் பட்சத்தில் சோர்வதும், கிடைக்கும்போது மேலும் மேலும் ஈடுபாடு காட்டுவதும் நிகழும். ஆணிற்கும் இவை தேவை எனினும், கடைமை தொடர்வதில் சுணக்கம் ஏற்படுவதில்லை.

    ஆணுக்காக ஒரு குரல் தந்தமை ஆறுதலாக இருக்கிறது

    ReplyDelete
  3. பறவையை வைத்து ஆணின் உலகை தொட்டது ஆறுதல்.

    ReplyDelete
  4. மிகவும் அருமை நண்பர் சதீஷ் அவர்களே

    ReplyDelete
  5. உண் எழுத்தின் தனித்துவமே குறையாத சுவாரசியம் மற்றும் புதிய வியக்கத்தக்க தகவல்கள்.. வாழ்த்துக்கள் சதீஷ்..
    இதில் ஒரு ஆறுதல்... மனிதன் மட்டும் என்றில்லை... குருவி முதல் அனைத்திலும் ஆண் என்றாலே போராட்டம் தான் எனும் போது !

    ReplyDelete
  6. சதீஸ் உங்கள் ஆண் எனும் அற்புதம் பதிவு படித்தேன். அருமையான கட்டுரை.

    இருவாட்சி பறவை பற்றியும் ஆண்களை பற்றியும் அற்புதமாக எழுதி இருந்தீர்கள்.

    பின்னூட்டம் போட முடியவில்லை.அந்த வசதி செய்தால் உங்கள் க்ட்டுரையை பற்வை ஆர்வலர்கள் படித்து உங்களிடம் தங்கள் சந்தேகங்களை சொல்லி பதில் கேட்டு பயன் பெறலாம்.

    //பறவை தானே... சிறகை விரித்து உல்லாசமாக வானில் பறக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அதன் துயரங்கள் புரியாது. மனிதர்களிடமிருந்தும் தப்பித்து இத்தனை விஷயங்களையும் அந்த ஒரு ஆண் பறவை செய்ய வேண்டியிருக்கிறது.//

    ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் குழந்தைகளை வளர்க்க வேண்டி இருக்கிறது.

    அடை காக்கும் போது ஆண்பறவை உணவு கொண்டு வந்து கொடுக்கிறது, பிற உயிரினங்களிடமிருந்து பாதுகாக்க இருவாட்சி பறவை குஞ்சை பாதுகாக்க அமர்ந்து இருக்கும் போது குஞ்சுகளுக்கு, அம்மாவிற்கு, தனக்கு என்று உணவு தேடுகிறது.

    //இருவாட்சியின் குஞ்சுகளுக்கு தாயின் கனிவு தான் தெரியும். தந்தையின் அர்ப்பணிப்பு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் ஆண் குஞ்சுகள் பெரிதானதும், தன் தந்தையைப் போலவே சுற்றிக் கொண்டிருக்கும். இது இயற்கையின் நியதி. ஆண்களின் தியாகங்கள் பேசாப் பொருளாகவே இருப்பதற்கு ஆண்களும் காரணம் தான். பரிணாம வளர்ச்சியில் எல்லா திறமைகளையும் பெற்றுக் கொண்ட ஆண், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ளவில்லை//



    எல்லா உயிரினங்களிலும் ஆண் பங்களிப்பு அதிகம் தான்.

    தன் குடும்பத்தை நேசிக்கும் ஆண் தன் குடும்பத்திற்கு உழைப்பதை யாரும் பாராட்ட வேண்டும் என்று நினைக்கமாட்டான். சுய தப்பட்டம் அடிக்க மாட்டான்.

    //எத்தனையோ வலிகளோடு வாழும் ஆண்கள் அத்தனை பேரும் இந்தப் புவியில் உயிர்கள் தழைத்திருக்க காரணமாக இருக்கும் அற்புதங்கள் இல்லையா ?//

    உண்மை.
    அருமையான கட்டுரை.

    ReplyDelete
  7. பல வரிகள் நினைவு கூர்வனவாக இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சி மென்மேலும் வளரவாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அருமையான பதிவு!

    ReplyDelete
  9. நன்றி ஆன் பெண் படிக்க வேண்டும் . varadharajulu kadathur

    ReplyDelete
  10. மிக அருமையான எழுத்துக்கள் மாப்பிள்ளை...👍👍👍

    ReplyDelete
  11. இருவாட்சி குருவியை மேற்கோள் காட்டி பதிவிட்டமை மிக மிக அருமை சதீஸ்

    ReplyDelete
  12. மிக நல்ல பதிவு.அழகிய தமிழ் நடை.
    ஆண்களின் துயரத்தை பறவைகள் மூலமாக
    வெளிப்படுத்தியமைக்கு நன்றி.பாராட்டுகள் சதீஷ்.
    மா.இராஜரத்தினம்.

    ReplyDelete