Jun 19, 2016

அழிவை நோக்கி இன்னும் வேகமாக....

2012 -ஆண்டு  ராஜஸ்தான்  மாநிலம் பரத்பூரில் பறவைகளை  காணச் சென்றிருந்தோம். அப்போது  நான் அதற்கு முன்பு பார்த்திராத ஒரு விலங்கை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். ஏனென்றால் அவை தென்னிந்தியாவில் இல்லை.  இந்த விலங்கின் பெயர் நீலான் (Nilgai). தற்போது இந்த விலங்கை கொல்வதற்கு தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு சொல்லப்படும்  காரணம், இந்த விலங்குகள் பயிர்களை நாசம் செய்கின்றன என்பதே. ஒரு புறம் காடுகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. மறுபுறம் விலங்குகளை கொல்ல அனுமதி கொடுப்பது என்ன நியாயம்? மேலும் காட்டுப்பன்றிகளையும் குரங்குகளையும் கொல்லவும் அரசு அனுமதி அளிக்கிறது.



சிக்கல் என்னவென்றால்  ஏற்கனவே இருக்கும் வனப்பாதுகாப்பு  சட்டமே விலங்குகளை பாதுகாக்க போதுமானதாக இல்லை. தொடர்ந்து வேட்டைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அரசே அனுமதி அளித்தால் நிலைமை என்னவாகும்?

மேலும் இவ்வாறு கொல்லப்படும்  விலங்குகள் உண்மையில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டதால் தான் கொல்லப்படுகின்றனவா என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? காடுகளுக்குள் இருக்கும் இந்த விலங்குகளும் கொல்லப்படாதா ?

இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நீலான் இன மான்கள் கொல்லப்ட்டுவிட்டன. தொடர்ந்து கொல்லப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

வெளிமான்களை வேட்டையாடிய சல்மான் கானுக்கு  பல ஆண்டுகளுக்கு பிறகும் தண்டனை கிடைக்கவில்லை. காடுகளில் வாழிடம் இழந்து வேளாண் நிலங்களுக்குள் புகுந்த காரணத்திற்காக ஒரு உயிரினத்திற்கு மரண தண்டனை கிடைக்கிறது. மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை எப்போது இந்த அரசாங்கம் உணரப் போகிறது ?