Jan 6, 2013

கொம்பனை ஏன் கொன்றார்கள்?

தமிழ் சினிமா முதல் முறையாக யானையை யானையாக காட்டியிருக்கிறது. ஆனால் யானையின் பிரச்சனைகளை பேசுவதற்கு பதிலாக யானையை வில்லனாக காட்டிவிட்டது. இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களில் யானை கிரிக்கெட் விளையாடவும், குழந்தை நட்சத்திரங்களின் அழுககையை நிறுத்தவும் மட்டுமே பயன்பட்டு வந்தது.

முதல் முறையாக காட்டு யானையை காட்டிய இயக்குனர், ஜுராசிக் பார்க்கில் டைனோசரை காட்டுவது போல காட்டு யானையை (கொம்பன்) அறிமுகப்படுத்தியிருக்கிறார். கட்டிடங்கள்  கட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதாக ஒரே ஒரு காட்சியில் மட்டும் சொல்லி முடித்துவிட்டார்கள்.



காட்சிகள் நகர நகர கொம்பன் வில்லனாக சித்தரிக்கப்பட்டு இறுதியில் கொல்லப்படுவது காட்டு யானைகளின் மீதான வெறுப்பை மக்களிடம் அதிகரிக்கச் செய்வது போலாகிவிடுகிறது. இறுதிக் காட்சியில் கொம்பன் சாகும் போது ஒட்டு மொத்த திரையரங்கமும் கைதட்டி கொண்டாடுகிறது. காட்டுயிர்களின் மீதான புரிதல் இல்லாத நம் சமூகத்தில் இது போன்ற காட்சிகள் காட்டுயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும்.

வனத்துறை அதிகாரிகள் இந்த படத்தில் ஏன் வருகிறார்கள்? வனத்துறை அதிகாரிகளை கெட்டவர்கள் போல காட்டவேண்டும் என்று திணிக்கப்பட்ட காட்சிகளாகவே இருக்கிறது. மறுபக்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை பேசவில்லை. போதிய மாத சம்பளம் கூட சரியாக வழங்கப்படமால் வேட்டை தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களை பற்றி காட்சிகள் எதுவும் வைக்கப்படவில்லை. ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

காடுகளை நேரடியாக சென்று ரசிக்க முடியாதவர்களுக்கு படத்தில் வரும் காட்சிகள் விருந்து. ஆனால் இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது காட்டிற்கும் காட்டுயிர்களுக்கும் தீங்கு ஏற்படாதவாறு செயல்பட்டார்களா எனத் தெரியவில்லை. படம் எடுக்கிறோம் என்ற பெயரில் காட்சிகளை அழகாக காட்டிவிட்டு காட்டை குப்பையாக்காமல் படமாக்கியிருந்தால் நன்றி. வாழ்த்துக்கள். காட்டுயிர்களின் மீதான அன்பை அதிகரிக்கச்செய்யும் ஒரு தமிழ் சினிமா  வர வேண்டும். காட்டுயிர்களின் பிரச்சனைகளை உரக்க பேசி அவற்றுக்கு குரல் கொடுக்க வேண்டும். வரும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment