நதி சூழ் நகரம் : ஸ்ரீரங்கபட்டணம் (பகுதி 2 )



திப்பு சுல்தான் உருவாக்கியிருந்த சிறைச்சாலையை பார்க்க நேர்ந்தது. இன்று அது ஒரு காட்சிப்பொருள் மட்டுமே. அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிறைச்சாலையின் மேல் தளத்தில் இருந்து காவிரியாற்றை  ரசித்துக்கொண்டிருந்தனர். அருகில் இருந்த தென்னை மரங்களில் கிளிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. காவிரியின் பரந்த அழகை அங்கிருந்து ரசிக்க முடிந்தது.

சம்மர் மஹால். திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டதை சித்திரங்களாக பதிவு செய்து வைத்திருக்கிறது. எல்லா சுவர்களிலும்  போர்  சித்திரங்கள் . திப்பு தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேயருடன் போரிட்டிருக்கிறார். எத்தனையோ குறுநில மன்னர்கள் ஆங்கிலேயரின் படையெடுப்பை தாக்குப் பிடிக்க முடியாமல்  சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் திப்புவின் வீரமும்  நம்பிக்கையும்  நிச்சயம் பாராட்டுக்குரியது. திப்பு அணிந்திருந்த உடைகளை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். பட்டு வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை. ஆடையின் சில பகுதிகள் கிழிந்திருந்தன. அந்த ஆடைகளுக்கு திப்புவின் நினைவுகள் மிச்சமிருக்குமா? வரலாற்றின் சாட்சியங்களே வரலாற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறதோ என்று தோன்றியது. திப்புவின் தேகத்தை மூடியிருந்த ஆடை திப்புவின் மூச்சுக்காற்றை எத்தனை முறை உணர்ந்திருக்கும்.

ரங்கநாத சுவாமி கோவிலுக்கு அந்த ஊரின் தெருக்கள் வழியாக நடந்து சென்றேன். இருநூறு வருடங்கள் கடந்த பழமையான வீடுகளும், அருகிலேயே புத்தம் புதிய வீடுகளும் மாறி மாறி இருந்தன. பசு மாடுகளின் போக்குவரத்தும், சாலைகளில் ஆங்காங்கே சாணமும் கிராமத்தை உணர வைத்தது. பெண்கள் மாலை நேரங்களில் தங்கள் வீட்டுத் திண்ணையிலோ படிகளிலோ அமர்ந்து பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருதனர். தமிழ் நாட்டில் தான் கிராமங்களில் கூட பெண்கள் சின்னத் திரையின் நெடுந் தொடர்களுக்குள் மூழ்கிப் போனது வருத்தமாக இருந்தது. திண்ணைகள் எவ்வளவு அற்புதமான இடம். மாலை நேரங்களில் திண்ணைகள் உயிர்ப் பெறுகின்றன. ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகள் கட்டப்படுவதே இல்லை.

கோவிலின் வெளியே குதிரை சவாரிக்காக நிறைய குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. திப்புவின் ஆட்சியில் குதிரை படையே இருந்தது. இன்றும் குதிரைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு முற்றிலும் மாறிப் போய்விட்டது. கோவிலை நோக்கி செல்லும் அந்த சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ஒரு காலத்தில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட குதிரைகள் இன்று வாகனங்களுக்கு வழி விட்டு சவாரிக்காக காத்துக்கொண்டிருந்ததன. எல்லா ஊர்க் கோவிலையும் போல அங்கும் காவி உடையில் சாமியார்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றிலும் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து பிரிந்த ஓடை கோவிலின் அருகே ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் கரையில் சிறிது தூரம் நடந்து சென்றேன். ஓடையின் இரு புறமும் கருங்கற்கலாக இருந்தன. மனிதர்களின் நடமாற்றம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. கற்களின் ஊடாக ஓடை எழுப்புகிற ஓசை மட்டுமே அந்த பகுதியில் நிறைந்திருந்தது. அடர்ந்த புதர்களும் மரங்களும் அந்த பகுதியை பசுமை கொள்ளச் செய்தன. ஒரு பாறையின் மேல் பெரிய சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். நானும் சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓடையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பாறையின் அருகில் பச்சை நிறத்தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. கற்களின் மீது மோதி சுழன்றடித்த படி தண்ணீர் ஓடிக் கொண்டே ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தது. தண்ணீரின் மொழி இதுதானோ எனத் தோன்றியது. நீரின் போக்கை பொருத்து ஒலியும் மாறுபடும் எனில் தண்ணீரின் மொழியை அதன் கரைகளே முடிவு செய்யும் போலும்.

கோவிலின் வெளிப் பிரகாரம் அகலமானதாக இருந்தது. பழமையான கல் சுவரின் ஊடாக நிறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கோவிலை கட்டும் போது, கால மாற்றம் கோவிலின் ஊடாக மின்சாரத்தை பாய்ச்சும் என யாரேனும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?

கோவிலில் இருந்து சற்று தொலைவில் படித்துறை இருந்தது. இரவு மெல்ல கசியத் தொடங்கியது. படியில் அமர்ந்துகொண்டு ஆற்றை கவனித்து வந்தேன். ஆற்றின் மறு கரையில் இருந்த மரங்கள் மெல்ல மறையத் தொடங்கின. ஆற்றின் போக்குக்கு இணையாக வௌவால்கள் பறக்கத்தொடங்கின. அவை கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. இத்தனை வௌவால்கள் கூட்டமாக பறப்பதை இங்குதான் பார்க்க நேர்ந்தது. பின் நாளில் கோவையிலும் மாலை நேரங்களில் இது போல வௌவால்கள் கூட்டமாக பறப்பதை பார்த்திருக்கிறேன். ஆறு இருளை விழுங்கத் தொடங்கியது. மனிதர்கள் நடமாட்டம் குறையவே ஆற்றின் பேரிரைச்சல் அதிகமானது. மனிதர்கள் உறங்கும் போது இயற்கை பேசத் தொடங்கிவிடும் போல. அல்லது இயற்கையின் பேச்சை மனிதர்கள் கேட்பதில்லையா? ஆறு எப்போதும் போல ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆறு ஒரு போதும் உறங்குவதில்லை. அதன் உறக்கத்தை மழையே முடிவு செய்கிறது. ஆனால் ஆற்றின் மரணத்தை மனிதன் முடிவு செய்கிறான். இரவு நேரங்களில் ஆற்றில் இறங்க பயமாக இருக்கிறது. அதுவே ஆற்றின் பலமாகவும் இருக்கக் கூடும்.

மறுநாள் விடிந்தவுடன் அதே இடத்திற்கு வந்தேன். ஆற்றில் நிறைய பேர் குளித்துக்  கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோரையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு எல்லோருடைய கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருந்தது. ஆற்றோடு சேர்ந்து எல்லோரும் குழந்தைகளாகிப் போனார்கள். ஆனாலும் ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ஏன் யாரும் மெனக் கெடுவதில்லை? ஆறு இவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள் ஆகிவிடுமோ என பயமாகவும் இருந்தது. ஆற்றை கடக்கும் ரயிலின் படிகளில் நின்றபடி ஆற்றை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் பயணிகள். ரங்கன்திட்டு பறவைகளில் ஒன்றிரண்டு ஆற்றின் மேலே பறந்து கொண்டிருந்தது. நான் ஆற்றில் இறங்கினேன். ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் நடுவில் வந்தமர்ந்த கொக்கு மீண்டும் பறக்கத் தொடங்கியது. நான் ஆற்று நீரில் மூழ்கியிருந்தேன்.



Post a Comment

0 Comments