திருமதி.ஜெயந்தி நடராஜன்



தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு.பக்தவச்சலத்தின் பேத்தி.

சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறைக்கு கேபினட் அந்தஸ்து இல்லாமல் இன்னமும் இணை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இன்னமும் சுற்றுச் சூழலுக்கான முக்கியத்துவத்தை இந்திய அரசு உணராமல் இருப்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு நிறையவே பணிகள் காத்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அவர் செய்ய வேண்டிய உடனடி பணிகள் :

  • சத்தியமங்கலம் வனப் பகுதியை தேசிய பூங்காவாகவும், புலிகள் காப்பகமாகவும் அறிவிக்க வேண்டும். மேலும் இந்த வனப் பகுதியை பாதுகாக்க தேவையான அதிகாரிகளையும் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.

  • வனப்பகுதிகளில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்.

  • சுமார் 2000 ச.கி.மீ பரப்பளவுள்ள பழனி மலை பகுதியை தேசிய பூங்காவாகவும், வன விலங்கு சரணாலயமாகவும் தரம் உயர்த்த வேண்டும் இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதால், மாநில அரசிடம் வலியுறுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • மேகமலை வனப் பகுதியை வனவிலங்கு சரணலாயமாக தரம் உயர்த்த வேண்டும்.

  • புலிகளின் வாழ்விடங்களை முறையாக கண்காணித்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • தனித் தனியாக உள்ள வனப்பகுதிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் வனவிலங்குகள் தடையின்றி பயணம் செய்ய முடியும்.

  • வன விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு தண்டனைகளை உடனுக்குடன் பெற்றுத் தர, வனத் துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

  • வறட்சி காலங்களில் விலங்குகளின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, நீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

  • வன விலங்குகளால் பொதுமக்கள் இழப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப் படவேண்டும்.

  • வறட்சி காலங்களில் காட்டுத்தீ பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கடற்கரையோரங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

  • வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் தங்குமிடங்களை முறையாக கண்காணித்து, மேலும் புதிய பறவைகள் சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளும் நிறையவே உள்ளது.

இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டிய பணிகளை தாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம், உலகின் அழகிய நிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்.







Post a Comment

0 Comments