Oct 15, 2022

யானைகளா ? கேபிள் காரா ? எது முக்கியம் ?

பழனி மலை முருகன் கோவிலில் இருந்து தென் திசையில் பார்த்தால் தெரியும் அந்த பசுமையான மலைத் தொடர் தான் பழனி மலைத் தொடர். மேகங்கள் அதிகம் இல்லாத மாலை நேரங்களில் மலைத் தொடரின் மையத்தில் இருக்கும் கொடைக்கானல் நகரில் விளக்குகள் ஒளிர்வதை காணலாம். பழனி மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த பகுதியில் இருக்கும் பறவைகள் பற்றியும் பல்லுயிர்கள் பற்றியும் நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மிகச் சிறந்த பல்லுயிர் சூழல் மிக்க இடமாக இது இருந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின், கொடைக்கானல் நகரின் வளர்ச்சியும், அயல் தாவரங்களின் பெருக்கமும், சுதந்திரத்திற்குப் பிறகு போடப்பட்ட புதிய சாலைகளும், அதிகரித்த வேளாண் நிலங்களும், பெருகிய சுற்றுலா தளங்களும் எண்ணற்ற சிக்கல்களை இந்த மலைத் தொடர் முழுக்க உருவாக்கின. 


மலைத் தொடரின் அடிவாரப் பகுதிகளில் ஒன்றான தேக்கந்தோட்டத்தில் பல பறவையினங்களை பார்க்க முடியும். ஆனால் அங்கும் நிறைய சிக்கல்களும் இடையூறுகளும் உள்ளன. மலைத் தொடரின் மேல் பகுதி புல்வெளி மற்றும் சோலைக் காடுகளால் ஆனது. அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. சமீபத்தில் சிறுத்தை வாகனத்தில் அடிபட்டு இறந்தது நினைவிருக்கலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளால் ஒட்டு மொத்த மலைத் தொடரும் குப்பைமேடாகி வருகிறது. சோலைக்குருவி என்ற அமைப்பு உயிரை கொடுத்து அந்த குப்பைகளை அகற்றி வருகிறார்கள். பல்வேறு அணில் இனங்கள் வாழும் இந்த மலைத் தொடரில் தான் அவை வாழிடத்தை தொலைந்து கொண்டிருக்கின்றன. குதிரையாறு பகுதியில் காணப்பட்ட நீர் நாய்கள் இப்போது இல்லை. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் இங்கு காட்டுத்தீக்கும் குறைவில்லை.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் இந்த மலைத் தொடரை காக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அரசுக்கும் உண்டு. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கேபிள் கார் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது. பழனியில் இருந்து கொடைக்கானல் வரை செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் செய்து முடிக்கும் முன்பே காடுகளுக்கு எவ்வளவு இடையூறு ஏற்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை. 2000 மீட்டர் உயரத்திற்கு செல்லும் இந்த கேபிள் கார் அமைக்க பல இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே மீதமிருக்கும் காடுகளும் அழிவுக்கு உள்ளாகவே வாய்ப்புகள் அதிகம். 

மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இதன் மூலம் பயணம் செய்யும் மக்கள் அனைவரையும் கொடைக்கானல் தாங்குமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். கோடை காலங்களில் வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறும் கொடைக்கானல் நகரம் கேபிள் காரில் வரும் 24000 சுற்றுலா பயணிகளை எப்படி சமாளிக்கும் ? உள்ளூர் மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை மூடச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் கொடைக்கானல் நகரின் நிலை என்னவாகும் ?

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களில் பழனி மலைத் தொடரும் ஒன்று. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து இப்போதும் மாலை நேரங்களில் யானைகளை பார்க்க முடியும். அங்கே ஒரு கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. மது அருந்துபவர்கள் அங்கேயே குப்பைகளையும் பாட்டில்களையும் போட்டுவிட்டுத்தான் போவார்கள். கொடைக்கானல் செல்லும் ஆம்னி பேருந்துகளின் ஒலிப்பான்களால் காடே அதிரும். எல்லாவற்றையும் இந்த யானைகள் சகித்துக் கொள்ள வேண்டும். மலைப்பகுதியில் கீழே தான் காடுகள் அதிகம். நடுவில் உள்ள பகுதிகள் பெருமப்பாலும் தோட்டங்கள் தான். அங்கு சென்றால் யானைகள் விரட்டி அடிக்கப்படும். காட்டை விட்டு வெளியே வந்தாலும் விளை நிலங்கள் தான். அங்கேயும் மின்வேலிகள் உண்டு. நெருங்கக் கூட முடியாது. ஒரு குறுகிய காட்டுக்குள் தான் இந்த பேருயிர்கள் தங்கள் எல்லைகளை சுருக்கிக் கொண்டு வாழ வேண்டும். திரும்பிய திசையெல்லாம் மனிதர்கள். இத்தனைக்கும் மனிதர்கள் பரிணாம வளர்ச்சிக்கும் இவை முந்தியவை. இந்த காட்டை உருவாக்கிய மூதாதையர்கள் இந்த யானைகள். இந்த கேபிள் கார்கள் யானையின் தலைக்கு மேலே செல்லும். இனி யானைகளின் தலையின் நேரடியாகவே குப்பைகளை கொட்டலாம். இன்னும் இந்த யானைகள் எத்தனை துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டும் ? 

இது மாதிரியான கேபிள் கார்கள் மற்ற நாடுகளில் செயல்படுத்தப்படுவதும் உண்மைதான். அங்கே நிலை வேறு. அந்த சூழல் வேறு. அங்கே மக்களின் மன நிலையும் வேறு. இங்கே அப்படியில்லை. ஒரு மரத்தை வெட்ட வேண்டிய இடத்தில நூறு மரங்கள் வெட்டப்படலாம். அதன் பிறகு நீதிமன்றம் செல்வதால் மரங்கள் திரும்ப வரப்போவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் சோலைமந்திகள் பழனி மலைத் தொடரில் முற்றிலும் அழிந்துவிட்டன. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மிக மிக மிக சொற்ப எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் மட்டுமே உள்ளது. இருவாச்சி பறவைகளையும் காணவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு புலி இருப்பதாக அறியப்பட்ட போது அது விஷம் வைத்துக் கொல்லப்பட்ட செய்திதான் முதலில் வந்தது.

இதுவரை கொண்டுவந்த வளர்ச்சித்திட்டங்களால் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டேன். இந்த திட்டம் எங்களால் தான் வந்தது என பலரும் பெருமை பேசுகிறார்கள். கேரளாவில் ஒரு யானை வெடிவைத்துக் கொல்லப்பட்ட போது சமூக ஊடகங்கள் பொங்கி எழுந்தன. ஒரு யானைக்கு தீ வைக்கப்பட்ட காணொளி பரவிய போதும் பலரும் கவலை தெரிவித்தார்கள். நாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பின் மறந்து போகவும் ஒவ்வொரு முறையும் இந்த யானைகள் சாக வேண்டுமா ? நீங்களே சொல்லுங்கள் யானைகளா ? கேபிள் காரா ? எது முக்கியம் ?


Oct 14, 2022

தமிழகத்தின் பறவை காப்பிடங்கள் : திரு.ஏ.சண்முகானந்தம் & முனைவர்.சா.செயக்குமார்

இந்த நூலை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த நூலை பற்றிய என்ன ஓட்டம் முழுவதும் மாறிவிடுகிறது. காரணம், இந்த நூல், வெறும் பறவை காப்பிடங்களை பற்றிய நூல் மட்டுமல்ல. இது தமிழகத்தின் பறவைகள் பற்றிய ஒரு ஆவணம். பறவைகள் பற்றி எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட அறிவியல் நூல். பறவையினுடைய உடல் பாகங்கள், அவற்றின் வாழிடம், அவற்றின் வலசை காலங்கள், வலசை வரும் இடங்கள் என மிக விரிவான தளத்திற்கு இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. 


ஒவ்வொரு பறவை காப்பிடத்திற்குமான பெயர் காரணங்கள், அது எப்படி சூழலியலோடு பொருந்திப் போகிறது என்பதற்கான விளக்கங்கள், இன்றைய சூழ்நிலையில் அந்த பறவை காப்பிடங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், பறவைகள் அந்த குறிப்பிட்ட காப்பிடத்திற்கு வருவதற்கான காரணங்கள், அவை எப்போது வலசை வருகின்றன, எங்கிருந்து வருகின்றன, எப்போது திரும்புகின்றன என விரிவாக பேசுகிறது இந்த நூல்.

பறவைகள் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள், பறவைகளுக்கான சரியான தமிழ் பெயர்கள், பெயரில் இருக்கும் சிக்கல்கள் என தமிழகம் சார்ந்த பறவைகள் பற்றிய எல்லா தலைப்புகளையும் ஒரே நூலில் முடிந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டதற்காகவே ஆசிரியர்கள் திரு.ஏ.சண்முகானந்தம் மற்றும் முனைவர்.சா.செயக்குமார் இருவரையும் வாழ்த்துகிறேன்.

பறவை காப்பிடங்கள் மட்டுமல்லாது, பறவைகள் அதிகம் வலசை வரக்கூடிய தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இந்த நூல் ஆதரிக்கிறது. அவை பறவை காப்பிடங்களாக மாற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பூர் நஞ்சராயன் குளம் சமீபத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அழகிய வண்ணப்படங்களுடன் கூடிய இந்த நூல் புதிதாக பறவை காணலை நோக்கி திரும்பும் பலருக்கும் உதவியாகவும் இருக்கும். பறவைகளின் வாழிடங்கள் சீரழிந்து வருவதை உரக்க பேசும் இந்த நூல் தமிழ் பசுமை இலக்கியத்தில் முக்கிய வரவாக இருக்கும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளை பறவைகளின் நலன் கருதியும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் கருதியும் அரசு கவனத்தில் கொண்டு அந்த பகுதிகளை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் சூழலியலை பார்க்கும் போது எல்லா மாவட்டங்களிலுமே பறவைகள் சரணாலயங்கள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. நீர் நிலைகளை மட்டுமே சார்ந்தில்லாது காடுகள் மற்றும் சம தளத்தில் உள்ள புல்வெளிப்பகுதிகளையும் பறவை காப்பிடம் என்ற அடையாளத்தோடு பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

காக்கைக்கூடு தளத்தில் இந்த நூலை வாங்கலாம்.

தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்


Oct 8, 2022

யாருக்கானது பூமி? - விமர்சனம் 6

அன்பு நண்பர் மற்றும் எழுத்தாளர் திரு.ஜி.சிவகுமார் அவர்களின் நீண்ட விமர்சனம். பேரன்பும் நன்றியும் சார். இப்படி ஒரு நீண்ட விமர்சனத்தை வாசிக்கையில் மனம் நெகிழ்கிறது. இந்த நூலை எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட உழைப்பு அர்த்தமுள்ளதாகிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி சார்.

=======================================




யாருக்கானது பூமி?
சூழலியல் கானுயிர்காப்பு பறவையியல் கட்டுரைகள்
பா.சதீஷ் முத்து கோபால்
காக்கை கூடு வெளியீடு
2014 15 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுச்சூழல் விருது பெற்ற நுல்
பா.சதீஷ் முத்து கோபால், காட்டுயிர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அவதானிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் இவர் பழனியை சேர்ந்தவர். தற்போது மென்பொருள் துறையில் பணி புரிகிறார் இது இவரது இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு.
வனத்தையும் கானுயிர்களையும் பறவைகளையும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல், ஒரு தொலைக்காட்சிச் தொடரைப் பார்ப்பது போல் வெற்றுப் பொழுதுபோக்காக பார்ப்பவர்களின் மத்தியில் பறவைகளையும், கானுயிர்களையும் தேடி அடர்ந்த வனத்திற்குள் பல நாட்கள் பயணம் செய்து, காத்திருந்து, பார்த்திருந்து அவற்றை புகைப்படங்களில் வார்த்தைகளில் பனிரெண்டு கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்
இப்போது கூட ஒரு மலைத் தொடரின் அடிவாரங்களில் பயணம் செய்கையில்,மிக நீண்ட தொலைவிற்கு இருளில் தகதகக்கும் நெருப்பைப் பார்த்திருப்பீர்கள். மனிதனின் அலட்சியத்தாலும் சுயநலத்தாலும் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு வனம் அழிவதை வாசிக்கும்போது மனம் பதறுகிறது.
காவிரி வனப்பகுதி,பழனி மலைத் தொடர்கள், ஸ்ரீரங்கப்பட்டணம், பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், வனவிலங்கு கணக்கெடுப்பிற்காகச் சென்றிருந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்ஹோலே வனப் பகுதி,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர்,பத்ரா புலிகள் காப்பக வனப்பகுதி,சத்தியமங்கலம் வனப்பகுதி, சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நகரம் என பறவைகளையும்,கானுயிர்களையும் தேடி அவர் பயணங்கள் செய்வதை அறிகையில் பிரமிப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது..
புலிகள் சரணாலயத்தில் வெகு அருகில் புலியின் பேரோசையைக் கேட்க வாய்த்த அவருக்கு அதைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.விரைவில் கிடைக்கட்டும்.
நத்தைகுத்தி நாரை போல ஒரு பறவையின் குணத்தை வைத்தே அதற்குத் தமிழ்ப் பெயரிடுகிறார்கள்.சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்தால்,அவை உணவைத் தேடி உண்ணும் தன் இயல்பைத் தொலைக்கின்றன.அதோடு பயணிகள் விட்டுச் செல்லும் உணவின் மீதங்களைப் பறவைகள் உண்பதால் அவற்றிற்கும் தீங்கு விளைகிறது. பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்ணும் தேன்சிட்டு அளவிலான பட்டு நெற்றி என்னும் சிறு பறவை மரங்களில் தலைகீக கீழ்நோக்கி நடக்கும் திறமை வாய்ந்தது இப்படி, வனங்கள், பறவைகள்,விலங்குகள் குறித்த தெளிவான நம்பகமான விவரங்கள்,அவற்றின் முக்கியத்துவம், தற்போதைய சூழ்நிலையில் வனங்களின், பறவைகளின் விலங்குகளின் அவலநிலை எல்லாவற்றையும் பொருத்தமான சங்க இலக்கியப் பாடல்களோடு விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.குறிப்பாக மழைநீரைத் தேக்கி வைத்து சிற்றோடைகளாக மாற்றித் தரும் சோலைக்காடுகளின் நன்மைகளையும்,அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வாசிக்கும் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.
பழங்குடியின மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறிப்பாக அந்த குழந்தைகளுக்கு தரவேண்டிய தரமான கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசும்போது ஆசிரியர்களும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று சொல்வது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.அதற்கு முதலில் காடு குறித்த தெளிவான புரிதலை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமல்லவா?
நிலத்திலும்,நீரிலும் நாம் சாதாரணமாகக் காணக்கூடிய பறவைகள்,கானுயிர்களிலிருந்து அடர்ந்த வனங்களில் மட்டுமே காணக்கூடிய பறவைகள்,கானுயிர்கள் வரை அவற்றின் பெயர்களோடு கூடிய புகைப்படங்கள், அவர்களைப் பார்த்த அனுபவங்கள் எல்லாவற்றையும் விரிவாகத் தந்திருக்கிறார்.
பறவைகளையும் அதிகமாக காணக்கூடிய இடங்களையெல்லாம் பட்டியலிட்டு தருவதோடு, செல்ல வேண்டிய காலம் முதலிய முக்கியத் தகவல்களையும் தருகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கும்,பொதுமக்களுக்கும் காடு,கானுயிர்கள்,பறவைகள் குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகிறார்.
அவர் வெறுமனே ஒரு பறவைகள்,கானுயிர்கள் பார்ப்பவர் மட்டுமல்ல,அவற்றைப் பாதுகாப்பதில்,அதன் வழி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சலிப்பின்றி உழைத்தும் வருகிறார்.அதனாலேயே இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
அருகில் அமர்ந்து பேசுவது போல் இயல்பான நடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களும் அவருடன் இணைந்து வனப் பயணங்களை மேற்கொண்டு, பறவைகளை வெகு அருகில் கண்ட இனிய அனுபவத்தைப் பெறுவார்கள்.
சூழலைக் காக்க,காடுகளைக் காக்க,காட்டுயிர்களைக் காக்க,நம் தலைமுறைகளைக் காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சதீஸ் முத்து கோபாலின் ஆசை நம் நலனுக்காக நிச்சயம் நிறைவேற வேண்டும்.
யாருக்கானது பூமி?என்கிற கேள்வியோடு நேர்த்தியான வடிவமைப்பில்,அழகிய அட்டைப்படமும் அமைந்த இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் வாசித்து முடிக்கையில் பூமி யாருக்கானது என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

Oct 2, 2022

Birds of Singapore - Page 6







Oct 1, 2022

Birds of Singapore - Page 5