Aug 30, 2020

சிவிங்கப்புலி [Asiatic Cheetah] - இந்தியாவின் இழப்பு [India]

இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பின் சமவெளிகளில் சுற்றித் திரிந்த உயிரினம் சிவிங்கப்புலி [Asiatic Cheetah]. இந்தியா மட்டுமல்லாது ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் இவை இருந்தன. தமிழ் நாட்டின் சத்தியமங்கலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசியாக வாழ்ந்த மூன்று சிவிங்கப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இன்றும் ஈரானில் மிக சொற்ப எண்ணிக்கையில் இவை மிச்சம் இருக்கின்றன. 


அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி மட்டுமே நமக்கு காடாக தெரிகிறது. மாறாக புல்வெளிகள் நிறைந்த சமவெளிப்பகுதிகளையும் காடாக கருதி அங்கிருக்கும் உயிர்ச் சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்கம் [Asiatic Lion], புலி [Bengal Tiger], சிறுத்தை [Indian Leopard], பனிச்சசிறுத்தை [Snow Leopard] என பூனை இனத்தின் பல உயிரினங்களை கொண்டிருந்த இந்த தேசம் சிவிங்கப்புலிகளை இழந்து 70 ஆண்டுகளாகிறது. இந்தியாவில் வாழ்ந்த சிவிங்கப்புலி  ஒன்றை சுவிட்சர்லாந்து அருங்காட்சியகம் கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக வைத்து பாதுகாக்கிறது. 

Taxidermy Specimen of Asiatic Cheetah at Zürich Zoological Museum




இந்திய விடுதலைக்கு முன்பாக இவை ஒரு சில மன்னர்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன. திரு.ஜெய் ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது ஆப்ரிக்க சிவிங்கப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர சில முயற்சிகளை செய்தார். தற்போது அந்த திட்டம் என்ன ஆனது எனது தெரியவில்லை. ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள் இந்திய காடுகளுக்கு பொருத்தமாக இருக்குமா என்ற விவாதமும் இன்னும் மிச்சம் இருக்கிறது. ஆப்ரிக்காவில் இம்பாலா [Impala] என்ற மானை வேட்டையாடி பழகிய இவை  இந்தியாவில் இருக்கும் வெளிமான்களை [Blackbuck] எப்படி வேட்டையாடும் ? இருந்தாலும் சிவிங்கப்புலியின் பெயரால் இந்தியாவில் இருக்கும் சில புல்வெளிக் காடுகள் காப்பாற்றப்படுமானால் இவற்றை இந்திய காடுகளில் அறிமுகப்படுத்தலாம். சூழல் பற்றிய பெரிய அக்கறை இல்லாத இந்த காலகட்டத்தில்  காடுகளை காக்க எல்லா விதமான முயற்சிகளும் அவசியமாகிறது. ஈரானிடம்  இருந்து சிவிங்கப்புலிகளை பெற்று இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் [Captive breeding] முயற்சிகள் செய்யலாம். 


Asiatic Cheetah : IUCN Status: Critically Endangered

மேலும் 


Aug 29, 2020

பங்குனி ஆமைகள் : கவிதை

அலைகடலின் நுரை ஒளியை 

மரபணுவில் வைத்திருக்கும்.

இட்டுவைத்த முட்டைகளை 

இயற்கையிடம் விட்டுவைக்கும்.


பல்லாயிரம் ஆண்டுகளாய்

பரிணமித்த உயிரனம்,

தெருவிளக்கின் வெளிச்சத்தால்

திசைமாறிச் செல்கிறது.


பட்டணத்தின் வீதியெங்கும் 

பெருகிவிட்ட தெருநாய்கள்,

ஆமை குஞ்சுகளை 

இரையாக்கி கொல்கிறது.


ஆமை நடை மூலமாக 

முட்டைகளை மீட்டெடுத்து 

அடைகாக்கும் மனிதர்கள் - 

கடலை உயிர்ப்பிக்கும் 

கற்றுணர்ந்த காவலர்கள்.


வங்கக் கடற்கரையில் 

வாழிடம் தொலைத்துவிட்டு 

மக்காத குப்பையிடையே 

மணற்பரப்பில் இடம்தேடும் 

பருவநிலை பிறழ்வறியா 

பங்குனி ஆமைகள். 


அலைகடலின் நுரையொளியை 

மரபணுவில் வைத்திருக்கும்.

இட்டுவைத்த முட்டைகளை 

இயற்கையிடம் விட்டுவைக்கும்.


- பா.சதீஸ் முத்து  கோபால் 


குறிப்பு : 


பங்குனி ஆமைகள்: Olive Ridley Sea Turtle (Lepidochelys olivacea)

IUCN Status: Vulnerable 

Thanks to Aravind Manoj for the photograph 






மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Aug 22, 2020

Saiga - சீனாவின் இழப்பு [China ]

மத்திய ஆசிய பகுதிகளில் பரந்த புல்வெளிகளில் [open dry steppe grasslands] வாழும் இரலை  [Antelope ] விலங்கு Saiga. பெரும்பாலும் இரண்டு குட்டிகளை ஈனும். இதன் நீண்ட மூக்கு பல மைல் தூரத்தில் இருக்கும் புல்வெளிப்பகுதிகளையும் அறிந்து அதற்கேற்ப இடம்பெயர உதவுகிறது. ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்பு உண்டு. இதன் கொம்புகள் மருத்துவ குணமுடையது எனக் கூறி ஆண் இரலைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதன் விளைவாக சீனாவில் இந்த விலங்கு முற்றிலும் அழிந்துவிட்டது. 


Taxidermy Specimen of Saiga at Oslo Natural History Museum


கஸக்கஸ்தான் நாட்டில் இவை காணப்பட்டாலும் அங்கும் அழிவையே சந்திக்கிறன்றன. வித்தியாசமான முக அமைப்பு கொண்ட இந்த விலங்கு அதிக அளவில் நோய் தாக்குதலுக்கும் உள்ளாகின்றன. கஸக்கஸ்தானில் மட்டும் 2015-ஆம் ஆண்டு சுமார் இரண்டு லட்சம் Saiga இரலைகள் உயிரிழந்தன. 

பருவநிலை பிறழ்வு (Climate Change) காரணமாக இதன் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய நீர்வழித்தடங்கள் ஆகியவற்றால் இதன் வலசை (Migrate) பாதைகள் மறிக்கப்பட்டு மிக அதிக அளவில் இதன் குட்டிகள் அழிந்துபோகின்றன. 

சீனாவில் மருத்துவம் என்ற பெயரில் காட்டுயிர்கள் பலவும்அழிவை சந்திக்கின்றன. இதற்கு புலிகள் முதல் அழுங்கு (Pangolin) வரை பல காட்டுயிர்களை உதாரணமாக சொல்லலாம். சீனாவின் இந்த போக்கினால் சீனாவில் மட்டுமல்லாது  மற்ற நாடுகளிலும் காட்டுயிர்கள் பலவும் அழிவை சந்திக்கின்றன.

Saiga : IUCN Status: Critically Endangered


Aug 15, 2020

Sumatran Rhinoceros - மலேசியாவின் இழப்பு [Malaysia]

ஜாவா காண்டாமிருகங்களை போலவே சுமத்ரா காண்டாமிருகங்களும் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்பட்டன. தற்போது இந்தோனேசியாவில் சிறு சிறு குழுக்களாக 80-க்கும் குறைவான எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ளன.  

பருவநிலை பிறழ்வு [Climate Change] காரணமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, இயற்கை பேரிடர்களான சுனாமி, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ, கால்நடைகளுக்காக காடுகளை  அழிப்பது என பல காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மிக முக்கிய காரணம் வேட்டையே. சுமத்ரா காண்டாமிருகம் மருத்துவ குணமுடையது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக அதிகளவில் தெற்காசியா முழுவதும் வேட்டையாடப்பட்டது.

மற்ற காண்டாமிருகங்களை ஒப்பிடும்போது அளவில் சிறியவை சுமத்ரா காண்டாமிருகம். 2015-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து இவை முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவற்றை பாதுகாக்க கடைசியாக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. 

Taxidermy Specimen of Black Rhinoceros (Diceros bicornis) [Left] and Sumatran Rhinoceros (Dicerorhinus sumatrensis) [Right]
at London Zoological Museum


செம்பனை மரங்களில் பெறப்படும் எண்ணெய் [Palm Oil] அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு சுமத்ரா காண்டாமிருகத்தின் வாழிடம் சுருங்கி, அவை தற்போது தொடர்பற்று இருப்பது அழிவுக்கே வழிவகுக்கும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தற்போது இவற்றை காப்பதற்காக இவற்றை காப்பகங்களில் [Captive Breeding] வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவா காண்டாமிருகம் மற்றும் சுமத்ரா காண்டாமிருகம் என இரண்டு இனங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தற்போது இந்தோனேசியாவிடம் இருக்கிறது.

Sumatran Rhinoceros: IUCN Status: Critically Endangered

மேலும் :




Aug 9, 2020

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020

பருவ நிலை பிறழ்வு [Climate Change] குறித்து உலகில் பல்வேறு வல்லுனர்களும் எச்சரித்து வரும் இந்த வேலையில் சுற்றுச் சூழல் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவே அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்து வரும் வெப்பநிலை, அவ்வப்போது ஏற்படும் பேரிடர்கள் பருவ நிலை பிறழ்வை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. வளர்ந்த முதலாம் உலக நாடுகள் தங்கள் நிலப்பரப்பை மாசுபடாமல் பாதுகாக்க மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டன.  அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வாழும் மக்கள் மொத்தமாக இந்த உலகில் உற்பத்தி செய்யப்படும் 80 சதவீதத்தை நுகர்வதாக ஆய்வு சொல்கிறது. 

இதற்காக மூன்றாம் உலக நாடுகள் தங்கள் சுற்றுச் சூழலை பணயம் வைக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதும், வேலை வாய்ப்பை அதிகரிப்பது அவசியம் என்பதும் உண்மை தான்.  தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 அந்நிய முதலீடுகளை கொண்டுவரும் என்பதும், அதன் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதும் அவர்கள் வாதமாக இருக்கலாம். ஏற்கனவே இருக்கும் சுற்றுச் சூழல் சட்டங்களே நமக்கு போதுமானதாக இல்லை என்பதை நாம் கண் கூடாக அனுபவித்து வருகிறோம். 

மனிதனின் அடிப்படை தேவையான தூய்மையான நீரை ஏன் அரசால் இன்னும் முழுமையாக கொடுக்க முடியவில்லை ? நம்முடைய நீர் நிலைகள் யாவும் மாசுபட்டது தான்  நம் வளர்ச்சியின் அடையாளமா ? புதிய அந்நிய முதலீடுகள் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக அடையும் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் வருமானத்தை மீண்டும் தூய நீருக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்ய வேண்டி வரும். சுற்றுச் சூழலை சீரழித்து உருவாகும் வளர்ச்சி எப்படி நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியும் ? 

சுற்றுச் சூழலை பாதுகாக்காமல் ஏழ்மையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவர முடியாது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் B2 பிரிவில் மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்று சொல்வது மக்களுக்கு சுற்றுச் சூழலின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. தற்போது அரசு அறிவித்திருக்கும் வரைவை திரும்பப்பெற்று சுற்றுச் சூழலை பாதுகாக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டியது காலத்தின் தேவை. 

#WithdrawEIA2020Draft