Oct 30, 2016

கோவையில் யானைகள் இரு(ற)ந்தன - கவிதை




வலசை தொலைத்த பேருயிர் ஒன்று 
வயிற்றில் குட்டியோடு
சாலையின் நடுவே நிற்கிறது.

ஒலிப்பான்களின் இரைச்சலில் மிரட்சியுற்று 
ஓடி வரும் பேருயிர் பின்னர் 
ரயில் பாதையில் நடக்கிறது.

இதற்கு முன் பார்த்திராத ரயிலை 
எதிர்கொண்டு நகர்கையில் புரிந்து கொள்ளவியலா 
மனதுடன் தப்பித்து ஓடுகிறது.

சீமைக் கருவேலக் காட்டில் 
உணவின்றி நீரின்றி அலைந்து பின்  
மின்வேலியில் மோதி திக்கற்று நிற்கிறது.

பசித்த வயிறோடு வயலுக்குள் நுழைந்த போது 
கொழுத்தி எறியப்பட்ட பட்டாசு 
அதன் நெற்றியில் பட்டு வெடிக்கிறது.

ஊருக்கு வெளியில் இருக்கும் குப்பை மேட்டில்
உணவை தேடத் தொடங்கியது பேருயிர்.

ஞெகிழிப் பைகளை உணவென்று நினைத்து விழுங்கும் பேருயிர் 
வயிற்றில் இருக்கும் குட்டிக்கு விஷத்தை 
ஊட்டிக் கொண்டிருந்தது..

தொலைவில் நின்று பேசிக்கொண்டார்கள்
"சரியான திருட்டு யானை"
நல்ல வேலையாக அது குட்டியின் காதுகளில் 
ஒரு போதும் விழப் போவதில்லை...



Oct 28, 2016

Butterflies of Kabini










Oct 15, 2016

கொடைக்கானலில் ஸ்கை வாக் அவசியமா?

ஒரு நாட்டின் பெருமையை உணர்த்துவதில் சுற்றுலாத் துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் சுற்றுலாத் தளங்களே குப்பைக் கூளங்களாக மாறி இருக்கும் போது, ஒரு புதிய திட்டத்தின் மூலம் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? சுற்றுலா என்ற பெயரில் காடுகள் தொடர்ந்து நாசமாக்கப்படும் நிலையில் புதிதாக வரும் திட்டங்களால் காடுகள் முற்றிலுமாக காணாமல் போய்விடாதா? கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் வெளியில் இருந்து வருபவர்கள் குப்பைகளை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழனி மலைத் தொடரில்ர இருக்கும் பல்வேறு கிராமங்களிலும் இன்றும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தில் தான் இருக்கிறது.



வழியில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உணவு உண்பதும், அதன் மிச்சத்தை தூக்கி எறிவதும், கூடவே கொண்டு வந்த "Use and throw" பொருட்களையும் வீசி எறிந்துவிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை என்றைக்காவது கண்காணித்து அறிவுரை வழங்குகிறதா சுற்றுலாத் துறை? குரங்குகளுக்கு உணவு கொடுத்து அதன் இயல்பை கெடுத்தது தான் மிச்சம்.



தற்போது வெளியிடபட்டிருகும் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. Dolphin Nose என்ற பகுதியில் Sky Walk வருமானால் காட்டிற்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்பது மட்டும் நிச்சயம் உண்மை. தனியார் நிறுவன உதவியுடன் இங்கே இதை அமைப்பதன் மூலம் யாருக்கு லாபம்? Dolphin Nose என்ற பகுதிக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை முதலில் இங்கே கட்டுப்படுத்த வேண்டும். மிகவும் குறுகலான சாலையில் பயணம் செய்து அந்த இடத்தை அடையலாம்.

சமீபத்தில் பறவைகளை காண அந்த பகுதிக்கு சென்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினேன். அங்கே உருவாகியிருக்கும் ஏராளமான கடைகளும் குடியுருப்புகளும் அந்த பகுதியை முற்றிலும் அசுத்தமாக்கியிருந்தன. வழி எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள். மிச்சமான உணவுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இது போதாதென்று ஒலிப்பெருக்கியில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. இயற்கை சூழல் ஏற்கனவே இங்கே சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், Sky Walk வந்தால் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.

சுற்றுலா என்பதே இன்பமானதாகவும் அறிவை வளர்க்கும் விஷயமாகவும் இருக்க வேண்டும். அதிலும் காடுகளுக்குள் சுற்றுலா என்பது காட்டை பற்றிய அறிதல் கொண்டதாக இருக்க வேண்டாமா? Eco- Tourism என்பது மருந்துக் கூட இல்லையென்றால், அதை ஏன் செயல்படுத்த வேண்டும் ? குணா திரைப்படம் வந்த பிறகு "Guna Cave" என்ற சுற்றுலாத் தளம் உருவானது. ஆனால் அதன் விளைவு என்ன? சாலை விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், குப்பை மேடு அவ்வளவுதான். உண்மையில் அந்த இடத்தின் பெயர் Devils Kitchen Shola என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளில் இதுவும் ஒன்று. அது சிதைந்து போவதுதான் சுற்றுலாத் துறையால் நடந்த மிச்சம்.

Pine Forest என ஒரு சுற்றுலா தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பைன் மரமே ஒரு அயல் தாவரம் தான். ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று காடுகளில் பெருமளவு பரவி காட்டின் ஆரோக்யத்தை சீரழிக்கிறது. இதன் விளைவாக காட்டு மாடுகள் அதன் வாழிடத்தை இழந்து உணவை இழந்து நகருக்குள் சுற்றி அலைகிறது. அது பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறதா?



இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் பாடம் கற்காமல் மேலும் காட்டை நாசமாக்கும் முயற்சியை மட்டுமே செய்வது யாருடைய லாபத்திற்காக? அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் தேவை. அதற்கு காடுகள் தான் அவசியமே ஒழிய Sky Walk அல்ல.




Oct 2, 2016

காந்தி விரும்பியது இதைத்தான்...!!

பழனி நகரின் வையாபுரிக் குளத்தை சுத்தம் செய்து தூர்வாரி பாதுகாக்கும் முயற்சியில் நண்பர்கள் களம் இறங்கிய போது பெரிய ஆதரவு எல்லாம் உருவாகவில்லை. சிலர் கேட்டுக் கொண்டார்கள். சிலர் பொருளதவி செய்தார்கள். சிலர் இது முடியாத காரியம் என்றார்கள். நகரின் நடுவில் இருக்கும் ஒரு குளத்தை எப்படி சுத்தம் செய்வது என்று சந்தேகம் எழுப்பினார்கள். மக்களை ஒருங்கிணைத்து அரசின் அனுமதியை பெற்று குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் வேலை தொடங்குவதற்கே பெரிய போராட்டமாக இருந்தது என்பது களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.




எல்லாவற்றையும் கடந்து ஓரளவுக்கு மக்கள் ஆதரவோடு பணிகள் தொடங்கப்ட்டுவிட்டன. யார் என்ன உதவி செய்தார்கள் என பட்டியலிடுவது சுலபமில்லை. ஒவ்வொருவர் செய்த உதவியும் மகத்தானது. சிலர் பொருளுதவி செய்தார்கள். சிலர் குளத்தில் இறங்கி குப்பை அள்ளினார்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாணவர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரையும் இந்தப் பணி எல்லோரையும் ஒரு இயக்கமாக ஈர்த்துக் கொண்டது.



இரவும் பகலும் குளம் பற்றிய சிந்தனையோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை அறிவேன். நகரின் நடுவில் இருக்கும் ஒரு குளத்தை சுத்தம் செய்வது என்பது சுலபமான காரியமில்லை என்பது உண்மை தான். ஆனால் குளத்தை சுற்றித் தான் நகரம் அமைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வையாபுரி குளம் பாதுகாக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உயரும். அழகான இயற்கை சூழல் உருவாகும். தற்போது அமைக்கப்ப்டிருக்கும் மண் திட்டுகள் தீவுகள் போலாகும். அங்கே பறவைகள் தங்க இடம் அமையும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மற்ற குளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். அடுத்து வரும் தலைமுறைக்கு நீராதாரமாக விளங்கும்.

ஆனால் இந்த குளத்தை சுத்தம் செய்வதிலும் பாதுகாப்பதிலும் எண்ணற்ற சவால்கள் உள்ளன. குளத்திற்குள் சாக்கடை நீர் நேரடியாக கலக்காமல் இருக்க வேண்டும். சாக்கடை நீரோடு சேர்ந்து வரும் மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் எதுவும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். குப்பைகள் வந்து கொட்டப்படாமல் இருக்க வேண்டும். நகரின் மையத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இது சாத்தியாமா என்றால், மக்கள் நினைத்தால் நிச்சயம் சாத்தியம் தான். சமீபத்தில் பழனி சென்றிருந்த போது குளத்திற்கு  நேரடியாக சென்று பார்த்தேன். குளத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட போதும், மண்ணோடு பிளாஸ்டிக் குப்பைகள் இறுக்கிப் போயிருந்ததை பார்க்க முடிந்தது. குளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால், தற்போது இருக்கும் குளத்தில் முதல் மூன்று அடிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகளோடு மண் இறுக்கிப் போயிருப்பதை பார்க்க முடியும். இந்த முதல் மூன்று அடியை மண்ணோடு அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். ஆனால் இது சுலபமான காரியம் அல்ல. எதிர் வரும் பருவ மழைக்குள் இதை தொடங்குவது சாத்தியமா எனது தெரியவில்லை. தற்போது குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்தால் ஆக்கிரப்பமிப்புகளும் அசுத்தப்படுத்துவதும் கட்டுப்படுத்தப்படும்.






மேலும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் மண் மேடுகள் மேல் மரக்கன்றுகள் நடப்பட்ட வேண்டும். மழைக்கு பிறகு குளத்தில் தண்ணீர் வந்த பிறகு இந்த மண் மேடுகள் தீவுகள் போலாகும். அங்கே மரங்கள் வளர்க்கலாம். பறவைகளுக்கு அது இடமாக மாறும். இந்த பணி இத்தோடு நிறைவடைந்து விடாது. அடுத்த ஆண்டும் தொடரப்பட வேண்டும். அதற்கு பொருளாதார உதவியும் மக்களின் நேரடியான பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் இந்த பயணம் வெற்றியடையும். ஒரு குளத்தை சுத்தம் செய்வதை விட முக்கியம் அது அசுத்தமாகாமல் பாதுகாக்க வேண்டும்.இந்த பணியை பழனியை சுற்றியுள்ள மற்ற குளங்களிலும் செய்ய வேண்டும். அதற்கு அரசின் ஆதரவும் பொது மக்களின் ஆதரவும் அவசியம்.



ஒரு சில முயற்சிகளை மக்களே ஒருங்கிணைந்து செய்யும் போது அது மிகப் பெரிய வெற்றியடைகிறது. சுத்தமான இந்தியாவைத் தான் காந்தி விரும்பினர். ஆனால் இன்றளவும் நமக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. வளர்ச்சி என்பது மிகப்பெரிய கட்டிடங்களில் இல்லை. சுத்தமான சுகாதரமான கிராமங்களையும் நகரங்களையும் கொண்டது. சூழலை பாதிக்காதது. மக்கள் நினைத்தால் பழனி வையாபுரி குளம் தமிழ் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக மாறும். என்னவாகும் என்பது காலத்தின் கையிலும் மக்களின் கையிலும் இருக்கிறது.