பறவைகளுக்காக ஒரு கிராமம்


பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் ஒன்றுக்கு சென்று திரும்பினேன். பறவைகளும் மனிதர்களும் இணைந்து வாழும் இது போன்ற ஒரு ஊரை உலக வரைபடத்தில் காண்பது அரிது. நாம் அருகில் சென்றால் சிட்டுக் குருவிகள் கூட நம் மீது நம்பிக்கை இல்லாமல் விருட்டென பறந்துவிடுகிறது. ஆனால் அந்த ஊரில், உருவில் பெரியதாக இருக்கும் மஞ்சள் மூக்கு நாரை கூட வீடு வாசலில் உள்ள மரங்களில் கைக்கெட்டும் தூரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கிறது. அந்த ஊர் மனிதர்கள் மீது பறவைகள் காட்டும் நம்பிக்கையின் அடையாளமாகவே இதை நான் பார்க்கிறேன். இப்படி ஒரு நம்பிக்கையை அந்த பறவைகள் அடைய வேண்டுமெனில், அந்த பறவைகள் மீது அந்த ஊர் மக்கள் செலுத்தும் அன்பு எத்தனை வியப்புக்குரியது.

பால் பாண்டி மாதிரியான மனிதர்களின் வாழ்வு மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. தன் வாழ் நாள் முழுவதையும் பறவைகளுக்காக அர்ப்பணித்து வாழும் இது போன்ற மனிதர்கள் பறவைகள் பெற்ற வரம். இயற்கை பெற்ற வரம். பறவைகளின் பின்னால் அலைந்து திரிந்து அவற்றை பற்றிய அறிவியலை உணர்ந்து அவற்றை பாதுகாக்கும் நல்லெண்ணம் கொண்ட மிகச் சிறந்த மனிதராகவே பால் பாண்டி அவர்களை பார்க்கிறேன்.

இயற்கையோடு இணைத்து வாழ்வதென்பது மிகவும் சிக்கலாகிவிட்ட இந்த கால கட்டத்தில், மனித நேயத்தை சத்தமில்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது கூந்தன்குளம்.



Post a Comment

0 Comments