செந்தலைக் கிளி



நான் என் நண்பருடன் பழனி மலை பகுதியிலுள்ள பெத்தேல்புரம் (ஓட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் வழி)  வனப்பகுதியில் பறவைகளை பார்ப்பதற்காக  நாள் முழுக்க நடந்து சென்று மாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது கூட்டம் கூட்டமாக செந்தலை கிளிகளை பார்க்க முடிந்தது. ஆனால் அது Plum Headed Parakeet ஆக இருக்குமா  அல்லது Blossom Headed Parakeet ஆக இருக்குமா என சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த அற்புதமான பறவையை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சம் உள்நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

எங்களுக்கு முன்னால் தனியாக பிரிந்து சென்ற நண்பர் என் கைப்பேசியில் அழைத்து சொன்னார். "அங்கிருந்து நகர்ந்து வெளியே வாருங்கள். உங்களுக்கு அருகில் யானைகள் நின்று கொண்டிருக்கின்றன". அங்கிருந்து வெளியே வந்து பார்த்த போது தான் தெரிந்தது, எங்களுக்கு வெகு அருகில் ஒரு யானை கூட்டம் நின்று கொண்டிருந்தது. அதில் ஆண் யானையும் குட்டியும் அடக்கம்.

யானைகள் நின்றிருந்தது கூட கவனிக்க முடியாத அளவில் அந்த பறவை எங்களை ஈர்த்திருந்தது. உடல் பச்சையாகவும் தலை மட்டும் சிவப்பாகவும் இருக்கும். பழனி மலை வனப் பகுதிகளில் இதனை வேறு எங்கும் நான் பார்த்தது கிடையாது.


Post a Comment

0 Comments